ஈரான் அமெரிக்கா போர் நிறுத்தம்.. சிலிண்டர் பிரச்சனை எப்போதுதான் தீரும்? இப்படி ஒரு சிக்கல் இருக்கா?
டெல்லி: ஈரான் அமெரிக்கா இடையே இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் நம் நாட்டில் எப்போது சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சனை சீராகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில் போர் முழுமையாக நிறுத்தப்பட்டால் 3 முதல் ஆறு வாரங்களில் எல்பிஜி விநியோகம் படிப்படியாக சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், நிலைமை இன்னும் மோசமாக மாறிவிடும்.
ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வந்தது. ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தின. பதிலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கியது. அதேபோல ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான் மூடியது.

வணிக சிலிண்டர் விநியோகம் பாதிப்பு
உலக வர்த்தக எண்னெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாகவே நடப்பதால் சர்வதேச அளவில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தியாவிலும் இதன் தாக்கம் கடுமையாக எதிரொலித்தது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் சமையல் எரிவாயு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
வீட்டு உபயோக சிலிண்டர் கூட தட்டுப்பாடு இன்றி கிடைத்தது. ஆனால் வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் ஹோட்டல்கள் எரிவாயு கிடைக்காமல் திண்டாடின. உணவு பொருட்களின் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டது. தற்போது ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியையும் உடனடியாக திறக்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது.
நெருக்கடி இன்றி கிடைக்குமா?
ஹார்முஸ் ஜலசந்தி அருகே தேங்கி நிற்கும் ஆயிரக்கணக்கான கப்பல்கள் இனி தங்கள் பயணத்தை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், எண்ணெய் விநியோகம் சீராகும். ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளதால், எரிவாயு சிலிண்டர் வழக்கம் போல நெருக்கடி இன்றி கிடைக்குமா? என்பதே இந்தியர்களின் கேள்வியாக உள்ளது.
ஆனால், இதற்கு நேரடியாக பதில் சொல்வது என்றால் உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்றே சொல்லப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை நிபந்தனையுடனே ஈரான் திறந்துள்ளது. அதாவது, ஈரான் முன்வைத்த 10 அம்ச திட்டத்தில், கட்டுப்படுத்தப்பட்ட கடற்பாதை நடைமுறை என்றே கூறியுள்ளது.
3 முதல் 6 வாரங்களில்
எனவே எந்த கப்பல்கள் எப்போது செல்ல வேண்டும் என்பதில் இறுதி கட்டுப்பாடு ஈரானிடமே இருக்கும். எனவே இது முழுமையான திறந்த பாதையாக இருக்காது சண்டை நிறுத்தம் தற்போதைக்கு 2 வாரங்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்க ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருந்தால், அடுத்த 3 முதல் ஆறு வாரங்களில் எல்பிஜி விநியோகம் படிப்படியாக சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், நிலைமை இன்னும் மோசமாக மாறிவிடும். அதாவது, தற்போதைய சூழல் நீடித்து ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருந்தாலும் கூட எரிவாயு விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு மாதத்திற்கும் மேலாகும் என்பதே நிபுணர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது
இந்தியா தனது எரிவாயு தேவைக்கு பெரும்பங்கு இறக்குமதியை நம்பியிருந்தாலும் இந்த இக்கட்டான சூழலை திறம்பட கையாண்டு பெரிய அளவில் பாதிப்பு இன்றி பார்த்துக்கொண்டது. புலம் பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க 5 கிலோ சிலிண்டர் விநியோகத்தை இரு மடங்காக அதிகரித்தது.












Click it and Unblock the Notifications