ஜம்மா மசூதி என்ன பாக்.கிலா உள்ளது? பீம் ஆர்மி ஆசாத் வழக்கில் டெல்லி ஹைகோர்ட் சரமாரி கேள்வி!
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி கைதான சந்திரசேகர் ஆசாத் ஜாமீன் வழக்கில் டெல்லி ஹைகோர்ட் நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
டெல்லி: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி கைதான சந்திரசேகர் ஆசாத் ஜாமீன் வழக்கில் டெல்லி ஹைகோர்ட் நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளனர். சந்திரசேகர் ஆசாத்தை கைது செய்தது ஏன் என்று நீதிபதி சரமாரி கேள்விகளை அரசு தரப்பிடம் எழுப்பி உள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நடந்த போராட்டங்களை பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் தீவிரமாக நடத்தி வந்தார். டெல்லியில் ஜம்மா மசூதியில் கடந்த டிசம்பர் 21ம் தேதி இவர் போராட்டம் நடத்தினார்.
இந்த போராட்டம் அமைதியாக நடைபெற்ற நிலையிலும் போலீசார் இவரை கைது செய்தனர். அப்போதில் இருந்து சந்திரசேகர் ஆசாத், ஜாமீன் பெற முயன்று வருகிறார். இவர் ஜாமீன் மீதான வழக்கு இன்று டெல்லி ஹைகோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

இன்று விசாரணை
இந்த வழக்கை டெல்லி ஹைகோர்ட் நீதிபதி காமினி லாவ் விசாரித்தார். அப்போது வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பினார். சந்திரசேகர் ஆசாத்திற்கு எதிராக எப்ஐஆரில் என்ன இருக்கிறது என்று நீதிபதி முதலில் கேட்டார். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் தெரியாது என்று கூறுகிறார்கள். இதனால் நீதிபதி கோபம் அடைந்தார்.

சரமாரி கேள்வி
இதையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர், சந்திரசேகர் ஆசாத் வன்முறையை தூண்ட பார்க்கிறார். அவரின் பேஸ்புக் போஸ்ட் எல்லாம் வன்முறையை தூண்டும் வண்ணம் இருக்கிறது என்று கூறினார். இதன்பின் சந்திரசேகர் ஆசாத்தின் பேஸ்புக் பக்கத்தை பார்த்த நீதிபதி காமினி, சந்திரசேகர் ஆசாத் அப்படி எதுவும் போஸ்ட் செய்யவில்லை.

மக்கள் தர்ணா
அவர் மக்களை தர்ணா செய்ய அழைத்துள்ளார். மக்களை இப்படி தர்ணா செய்ய அழைப்பதில் என்ன தவறு. போராட்டம் செய்தால் தவறா? போராட்டம் என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதை அரசு தடுக்க நினைக்க கூடாது. அதற்கு எதிராக கைது செய்ய கூடாது என்று கூறினார்.

டெல்லி போலீஸ்
இதன்பின் டெல்லியில் அப்போது ஜம்மா மசூதி அருகே 144 இருந்தது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதனால் மீண்டும் கோபம் அடைந்த நீதிபதி, ஏன் எப்போதும் 144 போட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் . அவசியம் இல்லாமல் 144 போடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் சொன்னது நினைவில் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர்.

சந்திரசேகர் ஆசாத்
அதன்பின், சந்திரசேகர் ஆசாத் எங்கும் வன்முறையை தூண்டவில்லை. ஜம்மா மசூதி ஒன்றும் பாகிஸ்தான் கிடையாது. அங்கு போராட்டம் செய்யலாம். ஜம்மா மசூதி பாகிஸ்தானில் இருந்தால் கூட, அவர் விசா எடுத்துக் கொண்டு அங்கு சென்று போராட்டம் செய்யலாம். பாகிஸ்தானும் ஒரு காலத்தில் இந்தியாவில்தான் இருந்தது, என்று நீதிபதி குறிப்பிட்டார்.

என்ன ஆதாரம்
இதில் கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்க அரசு தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டது. இதையடுத்து இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக கூறி நீதிபதிகள் தள்ளி வைத்தனர். சந்திரசேகர் ஆசாத் தற்போது மோசமான உடல்நிலையில் அவதிப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications