சட்டசபையில் ஜெயலலிதா சேலையை திமுகவினர் பிடித்து இழுத்ததாக நிர்மலா சீதாராமன் பேச்சு.. சம்பவம் உண்மையா ?
டெல்லி : தமிழக சட்ட சபையில் முன்னாள் முதலவர் ஜெயலலிதா சேலையை திமுகவினர் பிடித்து இழுத்தனர் என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது உண்மையா.. பொய்யா? அல்லது கட்டுக்கதைகள் பரப்பப்படுகிறதா என்பது குறித்து பார்ப்போம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பேசும் போது, திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.நேற்று திரௌபதி குறித்து கனிமொழி பேசியிருந்தார். முன்னதாக டிஆர் பாலு மாற்றும் ஆ ராசா ஆகியோரும் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தனர்.

இதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பதிலடி கொடுத்தார். அவர்களுக்கு தமிழில் பதிலடி கொடுத்து பேசினார். அப்போது நிர்மலா சீதாராமன் பேசுகையில், " 25ம் தேதி மார்ச் மாதம் 1989ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த கட்சி திமுக.. ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்துட்டு, அவமானப்படுத்திவிட்டு, எல்லாரும் உட்கார்ந்து சிரித்தனர்.. இதை கண்டு ஜெயலலிதா கோபம் அடைந்து வெளியேறினார். அப்போது அவர் சபதம் எடுத்தார். நான் திரும்பி வர மாட்டேன்.. வந்தால் முதலமைச்சராகத்தான் வருவேன் என்று சொன்னார்.. எனவே அந்த கட்சி திமுக.. இன்று திரௌபதியை குறிப்பிட்டு பேசுறாங்க.. இது என்ன அநியாயம்.. " என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இது பொய் என்று திமுக ஆதரவாளர்கள் பதில் அளித்துள்ளனர். பல நாட்களாக திமுகவிற்கு எதிராக கட்டமைக்கப்பட்ட ஒரு போலி நாடகம் அன்று நடக்காத ஒரு சம்பவத்தை இவர்கள் பொய்யாக பரப்பியதை சொல்லி இருக்கிறார் என்று விமர்சித்துள்ளனர்.
அன்று அவையில் என்ன நடந்தது என்று அன்று அவையில் எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்து ஜெயலலிதாவை பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்த திருநாவுக்கரசர் அவர்களே விளக்குவதாக ஒரு வீடியோவும் உள்ளது. அந்த வீடியோவில் திருநாவுக்கரசு பேசுகையில், ரொம்ப வருசம் கழிச்சு கலைஞர் முதல்வராக வந்தார்.
எம்ஜிஆர் மறைந்த பின்னர் நீண்ட வருடங்கள் கழித்து கலைஞர் கருணாநிதி முதல்வரானார். அப்படி முதல்வரான போது, அவர் நிதியமைச்சராகவும் இருந்தார். அவர் பட்ஜெட் படித்தார்.. அப்போது ஒரு எம்எல்ஏ பட்ஜெட் காப்பியை கிழிக்க முயற்சித்தார். அதை புரிந்து கொண்ட கலைஞர் கருணாநிதி. அதை தடுத்துக் கொண்டார்.
அப்போது அவரது கண்ணாடி கீழே விழுந்துவிட்டது. அதனை எடுக்க கருணாநிதி கீழே குனிந்தார். ஆனால் பின்னால் இருப்பவர்கள் அவரது முகத்தில் எம்எல்ஏ குத்திவிட்டதால் கண்ணாடி கீழே விழுந்துவிட்டதாக நினைத்துக் கொண்டார்கள். கருணாநிதி முகத்தில் ரத்தம் வந்தது என்று கூறி ஆக்கோரசமாக மாறினார்கள். இதனால் ஜெயலலிதா மீது அடிதடி நடந்தது.புத்தகத்தை எடுத்து வீசினார்கள்.. ஜெயலலிதா தான் அப்போது எதிர்க்கட்சி தலைவர்.. நான் எதிர்க்கட்சி துணை தலைவர்.. கேகேஎஸ்எஸ்ஆர் கொறடா பின்னாடி இருந்தார்..
இந்த அடிதடியில் பாதியை நான் தான் வாங்கினேன்.என் உச்சி மண்டை தான் வீங்கிப்போனது.. ஜெயலலிதா குனிந்து கொண்டு கையை வைத்து படுத்துக்கொண்டார்கள். ஓரளவுக்கு மேல் அடிப்பது குறைந்ததும் நாங்கள் அவரை அழைத்துக்கொண்டு வெளியேறினோம். ஆனால் ஜெயலலிதாவின் சேலையை எல்லாம் உருவினார்கள் என்று வதந்தி ஒன்று பரவிவிட்டது. கருணாநிதி முகத்தில் ரத்தமும வரவில்லை. ஜெயலலிதாவின் சேலையும் உருவப்படவில்லை.. இதெல்லாம்அதிகமாக பரவிய வதந்தி " என்று திருநாவுக்கரசு கூறினார்.
இதனிடையே திமுகவிற்கு எதிரான சில ஊடகங்கள் ஜெயலலிதா சேலை குறித்து வதந்தி பரப்பியதாகவும் அதனை தான் நிர்மலா சீதாராமன் பேசியதாகவும் திமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications