எஸ்டிபிஐ கட்சிக்கு தடையா.. பிஎஃப்ஐ மீதான தடை உத்தரவில் மத்திய அரசு குறிப்பிட்டது என்ன?
டெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோதமானவை என அறிவித்து தடை விதித்த மத்திய அரசு எஸ்டிபிஐ கட்சிக்கு தடை விதித்து இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் கிளைகளை பரப்பி செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய அரசு, பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறது.
அதே நேரம் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலவரங்களை தூண்டி வருவதாக குற்றம்சாட்டி அவற்றை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
5 ஆண்டுகள் தடை- பிஎப்ஐ ஆபத்தான இயக்கம்..4 மாதங்களுக்கு முன்பு எச்சரித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி !
என்.ஐ.ஏ. ரெய்டு
இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்து இருக்கிறார்கள். இதனை அந்த அமைப்பினர் மட்டுமின்றி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், மதசார்பற்ற இயக்கங்களும் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
போராட்டங்கள்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து நாடு முழுவதும் அந்த அமைப்பும், எஸ்.டி.பி.ஐ, இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு, எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. கேரளாவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
8 மாநிலங்களில் சோதனை
இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் நேற்று மீண்டும் காவல்துறை சோதனை நடத்தியது. பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ. நிர்வாகிகள் வீடுகளில் காவல்துறை சோதனை மேற்கொண்டது.
பிஎஃப்ஐக்கு தடை
நேற்று நடைபெற்ற சோதனைக்கு பின்னர் நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளை சட்டவிரோதமானவை என அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து இருக்கிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை, பிரதமர் மோடியை கொல்ல சதி என பல்வேறு குற்றச்சாட்டுகளை அந்த அமைப்பு மீது என்.ஐ.ஏ. சுமத்தியது.
துணை அமைப்புகள்
இத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துணை அமைப்புகளான ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பு, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில், என்.சி.எச்.ஆர்.ஓ மனித உரிமை அமைப்பு, நேஷனல் உமன்ஸ் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேசன், ரிஹாப் ஃபவுண்டேசன் ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
எஸ்டிபிஐ கட்சிக்கு தடையா?
மேற்குறிப்பிட்ட இந்த அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்து இருக்கும் சூழலில் அதன் அரசியல் கட்சியாக கூறப்படும் எஸ்.டி.பி.ஐக்கும் தடை விதித்துள்ளார்களா என்ற கேள்வி சமூக வலைதளத்தில் எழுந்துள்ளது. இதற்கு காரணம் என்.ஐ.ஏ. சோதனைக்கு முன்பே கடந்த செப். 14 ஆம் தேதி கோவையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. அலுவலகத்தில் அமலாக்கத்துறை திடீர் சோதனையில் ஈடுபட்டதே
தடை இல்லை
ஆனால், உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தடை உத்தரவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடன் தடை செய்யப்பட்டுள்ள துணை அமைப்புகளின் உறுப்பினர்கள் பி.எஃப்.ஐ அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், அந்த அமைப்புகளின் வரிசையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனவே அந்த கட்சிக்கு தடை விதிக்கவில்லை என தெரிகிறது.