கணிக்க முடியாத டெல்டா கொரோனா..வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் புது தலைவலி.. குழப்பத்தில் ஆய்வாளர்கள்
டெல்லி: இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகளிலேயே டெல்டா கொரோனா தான் வேகமாகப் பரவும் ஒன்றாக உள்ளது. இதனால் டெல்டா கொரோனா பாதிப்பைக் கண்டறிந்து, அதைக் கட்டுப்படுத்துவது என்பது மிகப் பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது
கடந்த 2019ஆம் ஆண்டு உலகெங்கும் பரவ தொடங்கிய கொரோனாவை, இன்னும் எந்தவொரு நாடும் முழுமையாகக் கட்டுப்படுத்தவில்லை. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக டெல்டா கொரோனா வைரஸ் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை சமயத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனா இப்போது உலக நாடுகளிலும் தனது ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது.

ஆஸ்திரேலியா ஊரடங்கு
குறிப்பாக ஆஸ்திரேலியாவை எடுத்துக்கொள்ளலாம். தீவிரமான கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வைரஸ் பரவலைச் சிறப்பாகக் கட்டுக்குள் வைத்திருந்த நாடு ஆஸ்திரேலியா. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் முதலில் சிட்னியில் பரவ தொடங்கிய டெல்டா கொரோனா, இப்போது அங்குள்ள பல முக்கிய நகரங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவின் பல முக்கிய நகரங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

1000 மடங்கு அதிகம்
மற்ற எந்த உருமாறிய டெல்டா வகைகளைக் காட்டிலும் டெல்டா கொரோனா அதிவேகமாகப் பரவுகிறது. சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் டெல்டா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நாசி பகுதியில் கொரோனா வைரஸ் 1000 மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல மற்றொரு ஆய்வில் டெல்டா கொரோனா தீவிர பாதிப்பையும் உயிரிழப்புகளையும் இரண்டு மடங்கு அதிகம் ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டறிவது சிரமம்
இதுபோன்ற பல்வேறு காரணங்களால் டெல்டா கொரோனாவை ஊரடங்கு மூலம் கட்டுப்படுத்த முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. அனைவருக்கும் வேக்சின் என்பதை இன்னும் செயல்படுத்த முடியாத நிலையில், டெல்டா கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரையும் கண்டறிந்து தனிமைப்படுத்துவது பெரும் சவாலாகவே உள்ளது. அதேபோல கொரோனாவால் பாதிக்கப்படும் பலரும் asymptomaticஆக இருப்பதால் தொடர்புகளைக் கண்டறிவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

வேகமாகப் பரவும் பாதிப்பு
கடந்த 2020ஆம் ஆண்டு, ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்படும் நபருடன் தொடர்பில் இருந்தால் அவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட ஆறு நாட்கள் ஆனது. ஆனால் இது இப்போது டெல்டா கொரோனாவால் நான்கு நாட்களாகக் குறைந்துள்ளது. இந்தச் சூழலில் மாஸ்க் அணிவதும் தனிமனித இடைவெளியை முறையாகப் பின்பற்றுவதும் வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
Recommended Video

டெல்டா கொரோனா
ஆனாலும்கூட வரும் காலத்தில் புதிதாக ஒரு உருமாறிய கொரோனா தோன்றலாம், அது டெல்டா கொரோனாவைவிட வேகமாகப் பரவும்கூட வாய்ப்புள்ளது. அதற்குள் அனைவருக்கும் வேக்சின் செலுத்துவதே ஒரு தீர்வு. இஸ்ரேல் போன்ற சில நாடுகள் தங்கள் மக்கள்தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம் பேருக்கு வேக்சின் போட்டுள்ளனர். அங்கெல்லாம் டெல்டா கொரோனா பாதிப்பு ஏற்படும் போதிலும், மருத்துவமனைகளில் அட்மிட் ஆவதும், உயிரிழப்புகளும் பெருவாரியாகக் குறைந்துள்ளது.

கொரோனா வேக்சின்
டெல்டா கொரோனா வேகமாகப் பரவுகிறது என்றாலும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக 2 டோஸ் வேக்சினை அளிப்பதன் மூலமே கொரோனாவை வெல்ல முடியும். அதேநேரம் மக்கள்தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம் பேருக்கு வேக்சின் போடும்வரை, தடுப்பூசி போட்டவர்களும்கூட மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications