திடீரென தேர்தல் தேதியை அறிவிக்க ஆணையம் முடிவு செய்தது ஏன்?
Recommended Video

டெல்லி: தேர்தல் ஆணையம் லோக்சபா தேர்தல் தேதியை அறிவிப்புதில் தாமதம் செய்து வருவதாக புகார்கள் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் இன்று மாலையே தேர்தல் தேதிய அறிவிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் மார்ச் முதல் வாரத்திலேயே அறிவிக்கப்படும் என்று பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் எதிர்பார்த்தன. ஆனால் இன்று காலை வரை தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பான பின்னணி காரணங்கள் குறித்து இப்போது தெரியவந்துள்ளன.

கடந்த 2014 ம் ஆண்டு மக்களவைக்கான தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் 4 ம் தேதியே அறிவிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 7 ம் தேதி தொடங்கி மே மாதம் 12-ம் தேதி வரை 9 கட்டங்களாக நடத்தப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் ஏப்ரல் மாதம் 24 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மே மாதம் 16-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த மாதத்தின் முதல் வாரத்திலேயே தேர்தல் அறிவிப்புகள் வெளிவந்துவிடும் என்று அனைத்துக் கட்சிகளும் எதிர்பார்த்திருந்தன. ஆனால் தேர்தல் ஆணையத்தில் அதற்கான எந்த சமிக்ஞையும் இல்லை. சில கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலையே வெளியிட்டுவிட்டன.
இது குறித்து விமர்சித்த காங்கிரஸ் கட்சி வானொலி தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் அரசு செலவிலேயே மோடிக்கு விளம்பரங்கள் கொடுக்கப்படுகிறது. பிரதமர் மோடி தனது அறிவிப்புகள் அனைத்தையும் அறிவித்து முடியும் வரை தேர்தல் ஆணையம் காத்திருக்கிறது என்றும் இது ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக மாற்றுகிறது என்றும் கூறியிருந்தது.
17 வது மக்களைவையை ஏற்படுத்துவதற்கான தேர்தல் அடுத்த மாதத்தில் தொடங்கி நடத்தப்படவேண்டும். இதற்கான அறிவிப்பை குறைந்த பட்சம் மார்ச் 8-ம் தேதியாவது தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று கட்சிகள் எதிர்பார்த்தன. ஆனால் அப்படி எதுவும் வெளிவரவில்லை. இதற்கான பின்னணி குறித்து விசாரித்தபோது உத்திரப் பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இது போன்ற நிகழ்சிகளில் பங்கேற்கும் அவர் மேம்பாலத் திட்டங்கள், அனல் மின்திட்டங்கள் ரயில்வே திட்டங்கள் என்று மத்திய அரசு சார்ந்த பல்வேறு மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைக்க வேண்டியுள்ளது அதோடு முடிந்த பல திட்டங்களை திறந்து வைப்பது போன்ற நிகழ்வுகள் இருப்பதால் அதுவரை நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படாது என்றும் கூறப்பட்டது.
வரும் 15 ம் தேதிக்குள் பிரதமரின் நிகழ்சிகள் முடிவடைவதால் அதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறின. பிரதமரின் நிகழ்வுகள் முடியும் வரை அவசரப்படவேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு பறந்துள்ளதாக கூறப்பட்டது. இதன் காரணமாகவே தேர்தல் தேதி அறிவிப்பு மார்ச் 10ம் தேதியானபின்னரும் அறிவிக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்றும் தகவல்கள் வெளியாகின
இந்தப் பின்னணியில்தான் இன்று மாலை தேதி அறிவிக்கப்படும் என்ற தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு மேலும் இழுத்தடித்தால் மக்கள் மத்தியிலும் பெயர் கெட்டு விடும் என்பதால்தான் அவசரமாக தேர்தல் தேதியை அறிவிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications