சைனா புராடெக்ட் வேஸ்டு.. நம்மகிட்ட வாங்க! வெற்றிக்கொடி நாட்டி அழைக்கும் இஸ்ரோ
டெல்லி: விண்வெளியில் இரண்டு பொருட்களை ஒன்றாக இணைப்பது என்பது தலைவலி பிடித்த காரியம். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் இதனை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கின்றன. இந்நிலையில், இன்று இந்தியாவும் இந்த சாதனையை செய்து காட்டியிருக்கிறது.
இதன் மூலம் விண்வெளி துறையை வணிகமயமாக்க இந்தியா முழுமையாக தயாராகிவிட்டது. உலகின் மற்ற நாடுகள் விண்வெளி தேவைக்காக இந்தியாவை நாடும் வாய்ப்புகள் இந்த சாதனை மூலம் பலமடங்கு அதிகரித்திருக்கிறது.

இது குறித்து மத்திய அரசின் மூத்த விஞ்ஞானி த.வி.வெங்டேஸ்வரன் கூறுகையில், "ரயில்ல எப்படி பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்குமோ, அதேபோல, விண்வெளியில் ஒரு பொருளுடன் மற்றொரு பொருளை இணைப்பதுதான் ஸ்பேஸ் டாக்கிங். ரயிலில் ஒரு பெட்டியிலிருந்து இன்னொரு பெட்டிக்கு நடந்து செல்ல முடிவதை போல, விண்வெளியில் ஸ்பேஸ் டாக்கிங் செய்வதன் மூலம் ஒரு விண்கலத்திலிருந்து இன்னொரு விண்கலத்திற்கு நம்மால் போக முடியும்.
ஆனால் ஸ்பேஸ் டாக்கிங் கொஞ்சம் கஷ்டமான வேலை. பூமியிலிருந்து சில நூறு கி.மீ உயரத்தில் உள்ள இரண்டு பொருட்களை, இங்கு உட்கார்ந்து கொண்டு ரிமோர்ட் கன்ட்ரோல் மூலம் இணைக்க முடியாது. எனவே அதற்காக தனியாக புரோகிராம்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் இரண்டு விண்கலன்கள் சரியான நேரம் பார்த்து, துல்லியமாக இணைந்துக்கொள்ளும். அதுபோல பாதுகாப்பாக கழன்றும் செல்லும்.
நாம் ஒரு ராக்கெட்டில் ஏறி விண்வெளிக்கு சென்று, பூமியை சுற்றிவிட்டு மீண்டும் வந்து சேர்கிறோம் என்றால் நமக்கு ஸ்பேஸ் டாக்கிங் தேவைப்படாது. ஆனால் நாம் போகிற ராக்கெட் திடீரென கோளாறு கொடுத்துவிட்டது எனில், நம்மை காப்பாற்ற இன்னொரு ராக்கெட் வரும். இந்த புதிய ராக்கெட்டுக்குள் போக வேண்டும் எனில், அது பழைய கோளாறு கொடுத்த ராக்கெட்டுடன் இணைய வேண்டும். இப்படி இணைக்க ஸ்பேஸ் டாக்கிங் உதவுகிறது. அந்த வகையில் ஸ்பேஸ் டாக்கிங் மிக முக்கியமானதாக இருக்கிறது.
நடைமுறை உதாரணத்தை சொல்ல வேண்டும் எனில், சுனிதா வில்லியம்ஸ் சென்ற ராக்கெட் திடீரென சம்பவம் செய்துவிட்டது. ஆனால் அவர் அதற்கு முன்னரே சர்வதேச விண்வெளி யைமத்திற்குள் நுழைந்துவிட்டார். இது ஸ்பேஸ் டாக்கிங் மூலமாகத்தான் நடந்தது. ஆக சர்வதேச விண்வெளி மையத்துடன் ராக்கெட்டை இணைக்க இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.
நிலவில் இறங்கி மண் எடுக்கப்பட்டது என்றும் விண்கற்களிலிருந்து கற்கள் எடுத்து வரப்பட்டது என்றும் செய்திகள் வருவதை நாம் பார்த்திருப்போம். இதை செய்ய 2 குட்டி ராக்கெட்கள் தேவை. இதை வைத்து அனுப்பும் அளவுக்கு சைஸில் பெரிய ராக்கெட் ஒன்றும் தேவை. அமெரிக்கா, சீனா, ரஷ்யாவிடம் இந்த பெரிய ராக்கெட் இருக்கிறது. அதாவது அவர்களிடம் கண்டெய்னர் லாரி இருக்கிறது. ஆனால் நம்மிடம் குட்டி யானைதான் இருக்கிறது. எனவே இரண்டு ராக்கெட்டை ஒன்றாக வைத்து அனுப்ப முடியாது. ஆனால் நம்மால் இரண்டு குட்டி யானைகளை விண்வெளியில் ஒன்றிணைக்க முடியும். இதுதான் ஸ்பேஸ் டாக்கிங்.
இதன் மூலம் இந்தியாவிடம் உள்ள ராக்கெட்டுகளை கொண்டு நிலவில் மண் துகள்களை எடுத்து வருவது போன்ற சாதனைகளை செய்ய முடியும்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications