சொல்லி அடிக்க போகும் இஸ்ரோ.. படுவேகமாக ரெடியாகும் சந்திரயான் 3.! ஏன் ரொம்ப முக்கியம் தெரியுமா
டெல்லி: இந்தியாவின் கனவுத் திட்டமாக இருக்கும் சந்திரயான்-3 அடுத்த வாரம் விண்ணுக்குப் பாய இருக்கும் நிலையில், இதற்கான பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது.
உலகின் அனைத்து டாப் நாடுகளும் இப்போது விண்வெளி துறையில் தொடர்ந்து ஆய்வுகளைச் செய்து வருகிறது. விண்வெளி துறையில் உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இஸ்ரோவின் செயல்கள் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்றே வருகிறது.

குறிப்பாக நிலவை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான் உலகளவில் கவனம் பெற்றது. சந்திரயான் 1 விண்கலம் 2008இல் ஏவப்பட்ட நிலையில், சந்திரயான் 2 2019ஆம் ஆண்டில் ஏவப்பட்டது.
சந்திரயான்-3: இதற்கிடையே இப்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் அனுப்ப உள்ளது. ஏற்கனவே இஸ்ரோ ஆய்வாளர்கள் சந்திரயான்-3 விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் உடன் இணைத்துவிட்டனர். இப்போது இந்தியாவிடம் இருக்கும் அதிக எடையைத் தூக்கிச் செல்லும் ராக்கெட் என்றால் அது ஜிஎஸ்எல்வி மார்க் 3 தான். அதை வைத்து இப்போது சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்ப உள்ளனர்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் தான் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் உடன் சந்திரயான்-3 விண்கலத்தை இணைத்துள்ளனர். பூமியை ஆய்வு செய்ய இஸ்ரோ வரும் ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலனை அனுப்பும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
என்ன திட்டம்: 3900-கிலோ எடையுள்ள இந்த விண்கலம் யுஆர் ராவ் மையத்தில் முதலில் பேலோட் உடன் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் பூமியின் சுற்றுப்பாதைக்கு வெளியே அதை நிலைநிறுத்தும் ராக்கெட்டின் உடன் இணைக்கப்பட்டது. பூமியில் இருந்து 3.84 லட்சம் கிமீ தொலைவில் அமைந்துள்ள நிலவுக்கு இந்த சந்திரயான் 3 ராக்கெட் அனுப்பும் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது.
முன்னதாக இது குறித்து இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் கூறுகையில், "சந்திரன் மீது சாப்ட் லேண்டிங் செய்வோம் என்று நம்பிக்கை இருக்கிறது. ஜூலை 14ஆம் தேதி இந்த ராக்கெட் ஏவப்படும். அது ஜூலை 19- 20 தேதிகளில் நிலவுக்குச் சென்று சேரும் என எதிர்பார்க்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
ஏன் இந்த நாட்கள்: ஏற்கனவே ஜூலை இரண்டாவது வாரத்தில் நிலவுக்கு ராக்கெட்டை அனுப்புவதே சரியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். அதே நாட்கள் தான் இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. நிலவு பூமியைச் சுற்றி வரும் நிலையில், இந்த நாட்களில் அனுப்பினால் தான் குறைந்தபட்ச எரிபொருள் பயன்பாடு, அதிக செயல்திறன் உடன் நிலவைச் சென்றடைய முடியும் என்பதே இந்த நாட்கள் இறுதி செய்யக் காரணமாக இருக்கிறது.
ராக்கெட்டின் மேல் உள்ள பேலோட்டில் தான் லேண்டர், ரோவர் ஆகியவை இருக்கும். நிலவுக்கு அருகே 100 கிமீ அருகே தான் இவை தனியாகப் பிரியும். இதில் உள்ள லேண்டர் நிலவில் மென்மையாகத் தரையிறங்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் அதேபோல ரோவர் நிலவுக்கு மேலே தொடர்ந்து சுற்றி வந்து ஆய்வு செய்யும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

முந்தைய மிஷன்: கிட்டதட்ட இதை மிஷனை கொண்டு தான் சந்திரயான் 2 கடந்த 2019இல் செலுத்தப்பட்டது. இதில் பெரும்பாலும் அனைத்தும் வெற்றிகரமாகவே இருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் லேண்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்படவே அது நிலவில் மோதியது. இருப்பினும், அதைத் தவிர மற்ற அனைத்துமே அங்கே வெற்றிகரமாகவே இருந்துள்ளது.
இதற்கிடையே இப்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரயான் 2இல் கற்ற பாடங்களுடன் சந்திரயான்-3ஐ அனுப்ப இஸ்ரோ ரெடியாகியுள்ளது. சந்திரயான்-3 நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்யப் போகிறது. மேலும், இதில் இருக்கும் லேண்டர் முடிந்தவரை நிலவில் மென்மையாக தரையிறங்க முயலும். இது மட்டும் வெற்றிகரமாக நடந்தால் இந்த மைல்கல்லை எட்டிய உலகின் நான்காவது நாடாக இந்தியா மாறும்.












Click it and Unblock the Notifications