ஆமா.. இந்தி, சமஸ்கிருதம் தெரியாது! இஸ்ரோவில் சாதித்த தமிழர்களை பட்டியலிட்டு விளாசிய ஆ ராசா!
டெல்லி: விஞ்ஞான கருத்துகள் சமஸ்கிருதத்தில் இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசிய நிலையில் சந்திரயான் திட்டத்தில் இஸ்ரோவில் சாதித்த தமிழர்களை பட்டியலிட்ட திமுக ஆ ராசா, அவர்களுக்கு இந்தி, சமஸ்கிருதம் தெரியாது. ஆங்கிலம், தமிழ் மட்டுமே தெரியும் என பேசி பதிலடி கொடுத்து பரபரப்பை கிளப்பினார்.
நாடாளுமன்ற சிறப்பு சட்டசபை கூட்டம் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு பெறுகிறது. லோக்சபாவில் நேற்று முன்தினம் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடந்தது. அதன்பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இன்று ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே லோக்சபாவில் இன்று நாடாளுமன்றத்தின் பிற செயல்பாடுகள் நடந்தன. அப்போது சந்திரயான் திட்டம் குறித்து பேசப்பட்டது. இந்த வேளையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சமஸ்கிருதத்தில் தான் விஞ்ஞான ரீதியிலான கருத்துகள் இருப்பதாக தெரிவித்தார். இதற்கு திமுக எம்பி ஆ ராசா பதிலடி கொடுத்தார்.
இதுதொடர்பாக திமுக எம்பி ஆ ராசா பேசியதாவது: சந்திரயான் திட்டத்தில் திட்ட இயக்குனர்களாக பணியாற்றிய அனைவரும் தமிழர்கள். அதோடு சந்திரயான் 1 திட்டத்தின் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான் 2 திட்டத்தின்போது இருந்த இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீர முத்துவேல் என அனைவரும் ஓபிசி வகுப்பை சேர்ந்தவர்கள்.
சந்திரயான் திட்டத்தில் தமிழர்களின் பங்கு அளப்பரியது. இதனால் கர்வத்தோடு நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும் சந்திரயான் திட்டத்தில் பணியாற்றிய தமிழர்கள் அனைவரும் அரசு பள்ளிகளில் படித்தவர்கள். இஸ்ரோவில் சாதித்த தமிழர்களுக்கு சமஸ்கிருதமோ, இந்தியோ தெரியாது. சந்திரயான் திட்டத்தில் பணியாற்றிய தமிழர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரியும்'' என பேசினார்.
முன்னதாக, ‛‛பாதுகாப்பு துறை அமைச்சர் சமஸ்கிருத்ததில் விஞ்ஞான கருத்துகள் இருப்பதாக கூறினார். ஆனால் எங்களின் தமிழ் புலவர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே பேசி இருக்கிறார்கள். திருவள்ளூவர் ‛சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என தெரிவித்துள்ளார்.
அதேபோல் சந்திரன் குறித்த பாரதியின் கூற்று இன்று மெய்யாகி உள்ளது. ‛வானை அளப்போம், கடல் மீனை அளப்போம். சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' தமிழ் இலக்கியங்களில் அறிவியல் கருத்துகளுக்கு எதிரான விஷயங்களை பார்க்க முடியாது'' எனக்கூறி ஆ ராசா பதிலடி கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications