பாஜக பலவீனமாகவே உள்ளது.. காங்கிரஸ் நினைத்தால் வெற்றி பெற முடியும்.. பிரசாந்த் கிஷோர் சொல்லும் ஐடியா
டெல்லி: ஐந்து மாநில தேர்தலை நான் செமி பைனல் என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் கடந்த முறை பாஜக ஐந்து மாநிலங்களிலும் தோல்வியை சந்தித்தது என்று பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார். மேலும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பிரஷாந்த் கிஷோர் பேசியுள்ளார்.
வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் தேர்தல் களம் அனல் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. மத்தியில் ஆளும் பாஜக வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து வருகிறது. அதேவேளையில், பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளன.

காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்பட 28 கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இந்தக் கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்துள்ளன. இந்தக் கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜகவை எதிர்கொள்வது தொடர்பாக வியூகம் வகுத்து வருகிறது. தென் மாநிலங்களில் பாஜக வீக்காக இருந்தாலும் வட மாநிலங்களில் பாஜகவின் பலம் தற்போதும் குறையவில்லை.
இந்தியா கூட்டணி: சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவிலும் இது பளிச்சிட்டது. தெலுங்கானாவில் பாஜக தோல்வியை தழுவினலும் இந்தி பேசும் மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகியவற்றில் அமோக வெற்றி பெற்றது. இதனால் வரும் லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற கனவில் பாஜக உள்ளது.
அதேவேளையில், பாஜகவின் இந்த கனவை தவிடுபொடியாக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. எனினும், இந்தியா கூட்டணி தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிதறிவிடும் என்றும் பாஜக ஆரூடம் கூறி வருகிறது. இந்தியா கூட்டணி கட்சிகளுக்குள் முரன்பாடு இருப்பதாகவும் இது சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போதே அப்பட்டமாக தெரிந்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பாஜக பலவீனமாகவே உள்ளது: இருந்தாலும் கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை என்று இந்தியா கூட்டணி கட்சிகள் கூறி வருகின்றன. இந்த நிலையில் தான், பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரஷாத் கிஷோர் பாஜக பலவீனமாகவே உள்ளது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பிரஷாந்த் கிஷோர் கூறுகையில், 2024 லோக்சபா தேர்தலில் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பாஜக பலவீனமாகவே உள்ளது.
செமி பைனலாக பார்க்கவில்லை: ஆனால் பாஜகவை வீட்டுக்கு அனுப்ப இந்தி பேசும் மாநிலங்கள் மற்றும் மகாராஷ்டிராவில் வலுவான காங்கிரஸ் தேவை. பாஜகவுடன் நேரடியாக மோத உள்ள தொகுதிகளில் குறைந்தபட்சம் 30 சதவிகிதம் காங்கிரஸ் கட்சி வெல்ல வேண்டும். இல்லையெனில் தேர்தலில் பாஜக எளிதில் வெற்ரி பெறும்" என்று கூறியுள்ளார். ஐந்து மாநில தேர்தலை நான் செமி பைனல் என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் கடந்த முறை பாஜக ஐந்து மாநிலங்களிலும் தோல்வியை சந்தித்தது.
3 மாநிலங்களில் வென்றால் மட்டும்: அப்படியென்றால் பாஜக இறுதிப்போட்டியிலும் தோல்வி அடைந்து இருக்க வேண்டும். எனவே தற்போது முடிந்ததை நான் அரையிறுதியாக பார்க்கவில்லை. இருந்தாலும் வெற்றியோடு செல்வது கூடுதல் சாதகம்தான். குறைந்தபட்சம் உளவியல் ரீதியிலாவது சாதகம்தான். பாஜகவுக்கு சாதகமான விஷயம் என்றாலும் 3 மாநிலங்களில் வென்றதால் மட்ட்டுமே லோக்சபா தேர்தலிலும் பாஜக வெற்றி பெற போகிறது என்பதில் உண்மையில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications