டிஜிட்டல் ஊடகங்களுக்கு நிதியளிக்கும் நிறுவனத்தில் திடீர் ஐடி ரெய்டு.. டெல்லியில் பரபரப்பு!
டெல்லி: டிஜிட்டல் ஊடகங்களுக்கு நிதியளித்து வரும் சில நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தேர்தல் ஆணையத்திடம் பதிவுசெய்து, அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத், டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் வருமான வரித்துறையினரின் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
அந்த ரெய்டில் அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறது, அவர்களின் வருமான மூலதனம் என்ன, யார் இயக்குகிறார்கள், பண உதவி செய்வது யார், வரி ஏய்ப்பு புகார் உள்ளிட்டவை குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகள் அலுவலகங்களில் நடத்திய சோதனை தொடர்பாக டெல்லியில் உள்ள ஆக்ஸ்ஃபம் இந்தியா என்ற தொண்டு நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் பெங்களூருவை மையமாக கொண்டு செயல்படும் ஐ.பி.எஸ்.எம்.எஃப் நிறுவனத்தில் வருமான வரித்துறை நடத்தப்படுகிறது. இந்த நிறுவனம் தி கேரவன், தி பிரிண்ட் மற்றும் ஸ்வராஜ்யா உள்ளிட்ட டிஜிட்டல் ஊடகங்களுக்கு நிதியளித்து வருகிறது.
ஆனால் இந்த ரெய்டு குறித்து அந்த நிறுவனங்கள் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து பெற்ற நன்கொடைகள் தொடர்பான சோதனை என்று தகவல் வெளியாகியுள்ளது.
டுபாக்கூர் அரசியல் கட்சிகளுக்கு போலி நன்கொடைகள்- நாடு முழுவதும் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு