குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்த கூடாது.. உச்ச நீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மனு
டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் வெளியானதை தொடர்ந்து, அச்சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மனு தாக்கல் செய்துள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வசிக்கும் இந்து, சீக்கியம், பவுத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்தவர்கள் மத ரீதியிலான துன்புறுத்தலின் காரணமாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அகதியாக தஞ்சம் புகுந்தால் அவர்களுக்கு குறிப்பிட்ட சில ஆண்டுகள் கழித்து குடியுரிமை வழங்க மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமானது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று 6 மாதங்களுக்குள் சட்டத்துக்கான விதிமுறைகளை வெளியிட்டால்தான், அச்சட்டம் அமலுக்கு வரும்.
ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சில மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.எனவே, விதிமுறைகள் வெளியிடப்படவில்லை. சட்டமும் அமல்படுத்தப்படவில்லை. இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டிருப்பதாக கடந்த டிசம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
அதையடுத்து இதற்கான பணிகள் வேகம் எடுத்தன. இந்த நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் சிஏஏ சட்ட அறிவிக்கையை மத்திய பாஜக அரசு வெளியிட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சிஏஏ சட்டம் அமல்படுத்துவதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மனு தாக்கல் செய்துள்ளது. சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாக வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications