பக்ரீத் பலியை தடுக்க.. முஸ்லிம் வேடமணிந்து ஜெயின் மக்கள் செய்ததை பாருங்க! 124 ஆடு வாங்கிய பின்னணி
டெல்லி: நாடு முழுவதும் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தான் பக்ரீத் பண்டிகையொட்டி டெல்லியில் ஜெயின் சமுதாய மக்கள் இஸ்லாமியர்கள் போல் வேடமணிந்து ரூ.15 லட்சத்துக்கு 124 ஆடுகள் வாங்கி குவித்ததும், அதன் பின்னணி குறித்த முக்கிய தகவலும் வெளியாகி உள்ளது.
இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் தியாகத்தை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் பக்ரீத் கொண்டாடப்பட்டு வருகிறது. ஹஜ் பெருநாள் என அழைக்கப்படும் இந்த பக்ரீத் என்பது இஸ்லாமிய இறைத்தூதர் இப்ராஹிம் இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த தியாகத்தை உணர்த்தும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை அணிந்து அசைவ உணவுகள் சமைத்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்குவார்கள். இதனால் பக்ரீத் கொண்டாட்டத்தையொட்டி நாடு முழுவதும் ஆடு விற்பனை என்பது களைகட்டும்.
அதன்படி நாடு முழுவதும் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்கள் பக்ரீத்தை சிறப்பாக கொண்டாடினார்கள். முன்னதாக ஆடு விற்பனை களைகட்டியது. இந்த மாதம் தொடக்கம் முதலே நாடு முழுவதும் ஆடு விற்பனை என்பது மும்முரமாக நடந்து வந்தது. இந்நிலையில் தான் பக்ரீத் பண்டிகையொட்டி இஸ்லாமியர்கள் போல் ஜெயின் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வேடமணிந்து டெல்லியில் ஆடுகளை வாங்கி குவித்துள்ளனர். பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகள் பலியிடுவதை தடுக்கும் நோக்கத்தில் ஜெயின் சமுதாயத்தினர் இதனை செய்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது ஜெயின் சமுதாயத்தை சேர்ந்த 30 வயது நிரம்பிய சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் விவேக் ஜெயின் என்பவர் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் ஆடுகள் பலியிடுவதை தடுக்க முடிவு செய்தார். இதுபற்றி அவர் தனது நண்பர்கள் உள்ளிட்டவர்களிடம் கூறினார். அவர்களும் முடிந்தவரை ஆடுகள் பலியிடுவதை தடுக்க வேண்டும் என்று கூறினர். இதுதொடர்பாக அவர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் விவாதித்தனர்.
அதன்பிறகு அவர்கள் ஜெயின் மக்களிடம் இந்த விஷயத்தை கூறி நன்கொடை வசூலிக்க தொடங்கினர். மொத்தம் ரூ.15 லட்சம் வரை பணம் கிடைத்தது. இதையடுத்து அந்த பணத்தை வைத்து அவர்கள் டெல்லியில் முக்கிய இடங்களில் பக்ரீத் பண்டிகைக்காக ஆடு விற்பனை செய்யப்படும் இடங்களுக்கு சென்று ரூ.15 லட்சத்துக்கு 124 ஆடுகளை வாங்கி வந்தனர். இந்த சமயத்தில் அவர்கள் இஸ்லாமியர்கள் போல் வேடமணிந்து சென்று பேரம் பேசி ஆடுகளை குறைந்த விலைக்கு வாங்கி வந்துள்ளனர்.
இதன்மூலம் பக்ரீத்தையொட்டி 124 ஆடுகள் பலியிடுவதை அவர்கள் தடுத்துள்ளனர். மேலும் அவர்கள் வாங்கி உள்ள 124 ஆடுகளைதற்போது டெல்லி சாந்தினி சவுக்கில் உள்ள கோவில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். இதுபற்றி சிராக் ஜெயின் என்பவர் கூறுகையில், ‛‛பக்ரீத்தையொட்டி ஆடுகள் பலியிடுவதை தடுக்க எங்களின் குரு சஞ்சீவ் விரும்பினார். இதையடுத்து கடந்த ஜுன் மாதம் 15ம் தேதி 25 பேர் கொண்ட குழுவை உருவாக்கினார். அதன்பிறகு வாட்ஸ்அப் குழுக்களில் இதுபற்றி எழுதி அனுப்பினோம். அதன்பிறகு டெல்லியில் ஜாமா மசூதி, மீனா பஜார் உள்ளிட்ட இடங்களுக்கு இஸ்லாமியர்கள் போல் வேடமணிந்து சென்று ஆடுகளை வாங்கி வந்தோம்'' என்றார்.
விவேக் என்பவர் கூறுகையில், ‛‛நாங்கள் யாருக்கும் பயந்து இஸ்லாமியர்கள் போல் வேடமணிந்து செல்லவில்லை. மாறாக ஆடுகளை வாங்குவோர் எங்களின் நம்பிக்கையுடன் விளையாடுவதை நாங்கள் விரும்பவில்லை. அதோடு இஸ்லாமியர்கள் இல்லை என்றால் கூடுதல் விலைக்கு ஆடுகளை எங்களிடம் விற்கலாம். இதனால் தான் இப்படி செய்தோம். நாங்களும் பேரம் பேசி சராசரியாக ரூ.10 ஆயிரத்துக்கு ஆடுகளை வாங்கினோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications