'சட்ட அங்கீகாரம் இருக்கு'.. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பரபர வாதம்
டெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனைத்து சட்ட அங்கீகாரங்களும் உள்ளன. எனவே ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தனது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாகவும் வீர விளையாட்டாகவும் ஜல்லிக்கட்டு உள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ்பெற்றது.
மனிதர்கள் காயமடைகிறார்களே குத்து சண்டையை தடை செய்யலாமா? ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனு
வெளிநாட்டில் இருந்து கூட வந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கு சுற்றுலாப்பயணிகள் வருகை தருகிறார்கள். இத்தகைய பெருமைகளையும் தமிழகத்தின் அடையாளமாகவும் உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய வேண்டும் என்று என பீட்டா உள்ளிட்டா 15 அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை கொடுமைப்படுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருவதாகவும் உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் அதனை தடை செய்ய வேண்டும் எனக்கூறி பீட்டா அமைப்புகள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்து வருகின்றன.
5 நீதிபதிகள் அமர்வு விசாரணை
இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. கேஎம் ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி டி ரவிக்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு தினமும் வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக இந்த வழக்கில் வாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இன்று நடைபெற்ற விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய அரசு வாதம்
அப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது மத்திய அரசு தனது தரப்பு வாதத்தை வைத்தது. துஷார் மேத்தே வாதிடுகையில் கூறியதவாது:- ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனைத்து சட்ட அங்கீகாரங்களும் உள்ளன. தமிழக அரசு மட்டும் இன்றி கர்நாடகா, மகராஷ்டிரா மாநிலங்களின் சடடங்களுக்கு முழுமையான சட்ட அங்கீகாரம் உள்ளது. பல்வேறு துறைகளுடன் ஆலோசித்து அனைத்துஅம்சங்களையும் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். எனவே ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது" என்று தனது தரப்பு வாதத்தை முன் வைத்தார். மத்திய அரசின் வாதங்கள் முடிந்த பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்கவே
முன்னதாக தமிழக அரசு தரப்பில் கடந்த சில தினங்களாக மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தார். ராகேஷ் திரிவேதி வாதிடுகையில், நாட்டில் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வகையான கலாசரங்களை கொண்டுள்ளது. சிலர் சைவ உணவை சாப்பிடுகிறார்கள்.. சிலர் அசைவ உணவை சாப்பிடுகிறார்கள். உணவுக்காக விலங்குகளை பலியிடும் கலாசாரம் உள்ளது. இதனால், விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்த முடியுமா? விலங்குகள் பலியிடுவது மதத்தின் ஒரு அங்கமாக கூட இருக்கிறது. தமிழக கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது" என்றார்.
காளைகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில்..
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா அமைப்பு தரப்பில் வழக்கறிஞர் ஷ்யாம் திவான் ஆஜராகி முன்னதாக தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்து இருந்தார். அப்போது, ஷ்யாம் திவான் வாதிடுகையில், ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு சட்டம் இயற்றியிருப்பது உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தில் தலையிடுவது போல உள்ளது. காளைகளை வளர்ப்பது நல்ல விஷயம் தான். ஆனால், காளைகளை கொடுமைப்படுத்தக்கூடாது. காளைகளை பாதுக்கிறோம் என்ற பெயரில் அவசர சட்டம் மூலம் காளைகளை வீரர்களுக்கு மத்தியில் போராட வைப்பது கொடூரமானது" என்று வாதத்தை முன்வைத்தார்.