ஜம்மு காஷ்மீரில் இன்று மற்றொரு தீவிரவாத தாக்குதல்.. குண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் பலி
டெல்லி: புல்வாமா மாவட்டத்தில் சுமார் 40 சிஆர்பிஎப் வீரர்கள் தீவிரவாதியின் தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், இன்று ரஜோரி மாவட்டத்தில் மற்றொரு தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ரஜோரி மாவட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், இன்று, வெடிகுண்டு தாக்குதல் (ஐஇடி) நடத்தப்பட்டுள்ளது. நவுசேரா செக்டார் என்ற பகுதியில் இன்று பிற்பகல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதில், இந்திய ராணுவத்தின் மேஜர் அந்தஸ்திலான ராணுவ அதிகாரி பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நவுசேரா செக்டார் பகுதி என்பது இந்திய எல்லைக்குள் சுமார் 1.5 கி.மீ தொலைவில் உள்ள பகுதியாகும்.
இங்கு வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளில் சிலவற்றை செயலிழக்கச் செய்யும் பணியில் ராணுவம் ஈடுபட்டபோது, அதில் ஒரு குண்டு வெடித்ததாகவும் கூறப்படுகிறது.
அடுத்தடுத்து இந்திய ராணுவத்தை குறி வைத்து நடத்தப்படும் இந்த தாக்குதல்களால் எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.