கர்நாடகாவில் பாஜக-மஜத கூட்டணியில் பிளவு? மாநில அரசுக்கு எதிரான பாஜக யாத்திரைக்கு குமாரசாமி எதிர்ப்பு
டெல்லி: கர்நாடகாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிளவு ஏற்படத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக நடத்தும் யாத்திரையின் தேவை என்ன? இதனால் எதை சாதிக்க நினைக்கிறது பாஜக? என கடுமையாக கேள்வி எழுப்பி இருக்கிறார் பாஜக கூட்டணி கட்சியான ஜேடிஎஸ்-ன் தலைவரான மத்திய அமைச்சர் குமாரசாமி.
கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் தேவகவுடாவின் ஜேடிஎஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் இடம் பெற்றுள்ளது. மேலும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஜேடிஎஸ்-ன் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியும் இடம் பெற்றுள்ளார்.

மூடா முறைகேடு: கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு வால்மீகி வாரிய முறைகேடு மற்றும் சித்தராமையா மனைவிக்கு 14 மனைகள் ஒதுக்கப்பட்ட மைசூர் வீட்டு வசதி வாரிய முறைகேடான "மூடா" முறைகேடு ஆகியவை பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளன. மூடா முறைகேட்டை முன்வைத்து சித்தராமையா பதவி விலக கோரி பெங்களூர் முதல் மைசூர் வரை பாதயாத்திரை நடத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது.
தேவகவுடா குடும்பம்: அதேநேரத்தில் மூடா எனப்படும் மைசூர் வீட்டு வசதி வாரியத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பமும் ஆதாயம் அடைந்தது; அதற்கான விவரங்களை வெளியிடுவேன் என முதல்வர் சித்தராமையா தெரிவிக்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தன்னிச்சையான பாஜக முடிவு: இந்த நிலையில் மத்திய அமைச்சர் குமாரசாமி பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்து பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் குமாரசாமி அளித்த பேட்டியில், மைசூர் பாதயாத்திரை நடத்துவது என்கிற முடிவை பாஜக தன்னிச்சையாகவே எடுத்தது. எங்களுடன் கலந்து ஆலோசிக்கவே இல்லை.
மழை வெள்ள பாதிப்பு: கர்நாடகா மாநிலத்தில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிராமங்க வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இந்த துயரமான நேரத்தில் பாதயாத்திரை, போராட்டங்கள் நடத்துவதால் மக்கள் நம்மை விமர்சிக்கத்தான் செய்வர். வட கர்நாடகாவும் கடலோர கர்நாடகாவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்..
குமாரசாமி கொந்தளிப்பு: அதைவிட்டுவிட்டு இப்படியான சூழ்நிலையில் பாதயாத்திரை, போராட்டம் நடத்தி எதை சாதிக்கப் போகிறதாம் பாஜக? "மூடா" முறைகேடுகள் விவகாரத்தை சட்ட ரீதியாகவே நாம் எதிர்கொள்ளலாம். அதில் ஒன்றும் பிரச்சனை இல்லையே. பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பிரீதம் கவுடா, தேவகவுடா குடும்பத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சதி நோக்கம் கொண்டவர். அவர்தான் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான பென் டிரைவ்வை வெளியிட்டவர்.
பெங்களூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பிரீதம் கவுடாவுக்கு அப்படி என்ன முக்கியத்துவம் தரப்பட வேண்டும்? அப்படியான ஒருவர் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நடக்கும் போராட்டத்துக்கு நாங்கள் ஏன் ஆதரவு தர வேண்டும்? என்றார்.












Click it and Unblock the Notifications