பாஜகவை விடாமல் விமர்சித்த கேசி தியாகி- ஜேடியூ செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து திடீர் ராஜினாமா!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசை வக்பு வாரிய மசோதா, பொது சிவில சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் கடுமையாக விமர்சித்து வந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் (ஜேடியூ) மூத்த தலைவர் கேசி தியாகி, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் புதிய செய்தித் தொடர்பாளராக ராஜீவ் ரஞ்சன் பிரசாத்தை நியமித்துள்ளதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜகவால் பெரும்பான்மை பெற முடியவில்லை. இதனால் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. 3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமரானார்.

பாஜக கூட்டணி அரசில் ஜேடியூ மிக முக்கியமான அமைச்சரவை பொறுப்புகளை எதிர்பார்த்தது. அப்போது சர்ச்சையாகவும் வெடித்தது. அத்துடன் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த வக்பு வாரிய மசோதாவை மிகக் கடுமையாக விமர்சித்தது ஜேடியூ. அக்கட்சியின் மூத்த தலைவரான கேசி தியாகிதான் பாஜகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்தும் வந்தார். அதேபோல பொதுசிவில் சட்ட விவகாரத்திலும் கேசி தியாகி, தமது எதிர்ப்பை தெரிவித்து வந்தார்.
பாஜகவின் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுக் கொண்டே பாஜகை கேசி தியாகி விமர்சித்து வந்தததால் ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் கடும் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தம்மை கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து விடுவிக்க வேன்டும் என நிதிஷ்குமாருக்கு கேசி தியாகி கடிதம் அனுப்பி இருந்தார். பாஜகவை எதிர்ப்பதால் ஜேடியூவுக்குள் சலசலப்பு எழுந்ததை இது உறுதி செய்தது.
இந்த நிலையில் கேசி தியாகி தமது செய்தித் தொடர்பாளர் பதவியை தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நிதிஷ்குமார், புதிய செய்தித் தொடர்பாளராக ராஜீவ் ரஞ்சன் பிரசாத்தை நியமித்து அறிவித்துள்ளார். ஜேடியூ கட்சிப் பதவியில் இருந்து விலகிய கேசி தியாகி, கட்சித் தலைமை மீது விமர்சனம் எதனையும் தற்போது வரை முன்வைக்கவில்லை. ஜேடியூவில் தொடர்ந்து நீடிப்பதாக மட்டும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications