ஜார்க்கண்ட் புரியாத புதிர்: தொங்கு சட்டசபை? மீண்டும் ஜேஎம்எம் - காங்கிரஸ் ஆட்சி? பாஜக வெல்லுமா?
டெல்லி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு, ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியே தொடரும்; பாஜக கூட்டணி வெல்லும் என கலவையான முடிவுகளைத் தெரிவித்துள்ளதால் ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 43 தொகுதிகளுக்கு நவம்பர் 13-ந் தேதியும் 38 தொகுதிகளுக்கு நவம்பர் 20-ந் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றன. இரு கட்ட வாக்குகளும் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் செய்யப்பட்டுள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கும் ஆளும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் தெளிவான முடிவுகளை வெளிப்படுத்தவில்லை.
Axis My India எக்ஸிட் போல் முடிவானது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ்- ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிதான் மீண்டும் பிரம்மாண்ட வெற்றியைப் பெறும் என கணித்துள்ளது. ஆனால் C Voter எக்ஸிட் போல் முடிவானது பாஜக தனித்தே 34 இடங்களில் வெல்லும்; கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பாஜக அணியே ஆட்சி அமைக்கும் என்கிறது.
இதுவரையிலான 3 கருத்து கணிப்பு முடிவுகளில் பாஜக கூட்டணியே ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. 2 கருத்து கணிப்புகள் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியைத் தக்க வைக்கும் என தெரிவித்துள்ளன. சில கருத்து கணிப்புகளோ தொங்கு சட்டசபைதான் ஏற்படும்; குழப்பமான சூழ்நிலை உருவாகும் எனவும் கணித்துள்ளன. இதனால் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.












Click it and Unblock the Notifications