ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு புதுவை, தெலுங்கானா ஆளுநராக கூடுதல் பொறுப்பு!
டெல்லி: ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுச்சேரி (புதுவை) மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, தெலுங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தமது பதவியை ராஜினாமா செய்தார். லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட இருப்பதால் தமது பதவியை ராஜினாமா செய்தார்.

18-வது லோக்சபா தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியது தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியில் இருந்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திடீரென ராஜினாமா செய்தது. ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர், துணைத் தலைவர், பாஜக தேசிய செயலாளர் ஆகிய பதவிகளை வகித்தவர் தமிழிசை சவுந்தரராஜன். 2014 -ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தமிழ்நாடு பாஜக தலைவராகவும் இருந்தார். 2019 லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் கனிமொழியிடம் தோல்வியைத் தழுவினார்.
இதனைத் தொடர்ந்து தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். பின்னர் புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வகித்து வந்தார் தமிழிசை சவுந்தரராஜன்.
இந்த நிலையில் திடீரென தமது ஆளுநர் பதவியை தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ராஜினாமா செய்தார். மேலும் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறேன் எனவும் அறிவித்தார்.
இதனையடுத்து ஜார்க்கண்ட் மாநில ஆளுநரான தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனுக்கு தெலுங்கானா- புதுவை துணை நிலை ஆளுநர் பொறுப்புகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications