பாஜக தலைவர் ஜேபி நட்டா பதவிக் காலம் 2024 வரை நீட்டிப்பு-லோக்சபா தேர்தலில் மீண்டும் வெல்வோம்: அமித்ஷா
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக் காலம் 2024-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி தலைமையில் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மீண்டும் பாஜக வென்று ஆட்சி அமைக்கும் எனவும் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2023-ம் ஆண்டு பாஜகவுக்கு மிக முக்கியமான காலம். இந்த ஆண்டு நாடு முழுவதும் 9 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த 9 மாநில சட்டசபை தேர்தல்களில் வெல்வதற்கு பாஜக கடுமையாக போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மேலும் 9 மாநில சட்டசபை தேர்தல்கள்தான் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் 9 மாநில தேர்தலை எதிர்கொள்வதற்கு பாஜக படுதீவிரமாக வியூகம் வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்றும் இன்றும் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 35 மத்திய அமைச்சர்கள், 12 மாநிலங்களின் முதல்வர்கள், 37 மாநில தலைவர்கள் பங்கேற்றனர். இந்த செயற்குழுக் கூட்டத்துக்கு சென்ற பிரதமர் மோடிக்கு பிரம்மாண்டமான உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஜேபி நட்டா ஆட்டம் காட்ட நினைத்து வாலாட்ட கூடாது.. முரசொலி கடும் எச்சரிக்கை
டெல்லியில் நேற்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் 9 மாநில தேர்தல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது; வாக்குச் சாவடிகளில் பாஜகவுக்கு பலவீனமானவை குறித்து கண்டறிந்து வலுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த கூட்டத்தில் பேசிய ஜேபி நட்டா, 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமே 9 மாநில தேர்தல். மேகாலயா, திரிபுரா, நாகலாந்து, மிசோரம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டாவின் பதவி காலம் 2024-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார்.