காவிரியிலிருந்து ஜூன் மாதம் திறக்க வேண்டிய நீரை தாருங்கள்.. கர்நாடகத்தை வலியுறுத்திய தமிழகம்
டெல்லி: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீரை, திறந்து விடுமாறு கர்நாடகத்தை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்ள உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுவை ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே குறுவை சாகுபடிக்காக வழக்கப்படி ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படாது என்ற தகவலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமான மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.
தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையில் 17.686 டிஎம்சி நீர் தான் இருப்பு உள்ளது. இந்நிலையில் காவிரி நதி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழக அரசின் சார்பில் பொதுப்பணி துறையின் திருச்சி பிரிவுத் தலைமைப் பொறியாளர் செல்வராஜு, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட நால்வர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் காவிரி நீர் தொடர்பான தங்களது தரப்பு புள்ளி விவரங்களை இக்கூட்டத்தில் சமர்பித்தனர். அப்போது தமிழகத்திற்கு ஜூன் மாதம் திறக்க வேண்டிய 9.2 டிஎம்சி தன்ணீரை வரும் 1-ம் தேதி முதல் திறந்து விட வேண்டும் என தமிழக அரசு அதிகாரிகள் கர்நாடக பிரதிநிகளிடம் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து வரும் 28-ம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications