அலைகடெலன திரண்டிருக்கும்.. அட 100 பேர்தானா.. ஷாக் ஆன ஆர்எஸ்எஸ்!
டெல்லி: ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் இன்று ஆர்எஸ்எஸ் அழைப்பு விடுத்திருந்த யாத்திரைக்கு வெறும் 100 பேரே கூடியதால் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
லட்சக்கணக்கில் தொண்டர்கள் திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும், ஆனால் 100 பேரே திரண்டதால் ஆர்எஸ்எஸ் தரப்பு கடும் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. 9 நாட்கள் இந்த யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லி ஜான்டேவாலா கோவிலில் இந்த யாத்திரை தொடங்கியது. 9 நாள் யாத்திரையானது டிசம்பர் 9ம் தேதி ராம்லீலா மைதானத்தில் முடிவடைகிறது. ஸ்வதேசி ஜாக்ரன் மன்ச் (ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு பிரிவு இது) மூலமாக நடைபெறும் இந்த யாத்திரையானது, ராமர் கோவிலை விரைவில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்படுகிறது.
மன்ச்சின் இணை ஒருங்கிணைப்பாளர் கமல் திவாரி கூறுகையில், இவர்கள் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த தொண்டர்கள்தான். விரைவில் பெருமளவில் சேருவார்கள். ஒவ்வொரு பகுதியிலிருந்தும் இணையவுள்ளனர். படிப்படியாக கூட்டம் அதிகரிக்கும் என்று கூறி தர்மசங்கடத்தை சமாளித்தார்.
ராம்லீலா மைதானில் யாத்திரை முடிவடையும் நாளில் கிட்டத்தட்ட 6 முதல் 8 லட்சம் பேர் வரை திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் திவாரி கூறினார் (வந்துருவாங்கள்ள பாஸ்??)
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் வரவுள்ளது. இதனால் ராமர் கோவில் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளன இந்துத்வா அமைப்புகள். அதன் ஒரு பகுதியே இந்த டெல்லி யாத்திரை.