சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்! மே 14ல் பதவியேற்பு.. குடியரசு தலைவர் உத்தரவு
டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவிக் காலம் மே 13ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் நியமிக்கப்பட்டுள்ளார். தனக்குப் பிறகு நீதிபதி கவாயை தலைமை நீதிபதியாக நியமிக்க நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரை அளித்திருந்த நிலையில், அதை ஏற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
இப்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இருக்கிறார். அவரது பதவிக்காலம் அடுத்த மாதம், அதாவது மே 13ம் தேதியுடன் நிறைவடைகிறது. மரபுபடி ஓய்வு பெறும்போது தலைமை நீதிபதியாக இருப்பவர், தனக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருப்பவரைத் தலைமை நீதிபதியாகப் பரிந்துரை செய்வார்.

நீதிபதி கவாய்
அதன்படி கடந்த ஏப்ரல் 16ம் தேதி நீதிபதி கவாயை தலைமை நீதிபதியாக நியமிக்க நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரை அளித்திருந்தார். சட்டத்துறை அமைச்சகம் புதிய தலைமை நீதிபதி குறித்து பரிந்துரையை கோரியிருந்த நிலையில், சஞ்சீவ் கண்ணா தனது பரிந்துரை அளித்திருந்தார். இதற்கிடையே தலைமை நீதிபதியாக சஞ்சய் கண்ணாவின் பரிந்துரையை ஏற்று, உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ராமகிருஷ்ண கவாயை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார். நீதிபதி கவாய் மே 14ம் தேதி தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.
இது தொடர்பாக மத்தியச் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாயை மே 14 முதல் இந்தியத் தலைமை நீதிபதியாக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
எவ்வளவு நாள்
மே 14ம் தேதி பதவியேற்கும் நீதிபதி கவாய் ஆறு மாதங்கள் மட்டுமே உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருப்பார். ஏனென்றால் அவர் வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார். கடந்த 2007ஆம் ஆண்டு நாட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட கே.ஜி.பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, தலைமை நீதிபதி பதவியை வகிக்கும் இரண்டாவது தலித் இவர் ஆவார்.
புதிய தலைமை நீதிபதி கவாய்
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி பகுதியைச் சேர்ந்த கவாய் 1960ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி பிறந்தார். சமூக ஆர்வலரும் முன்னாள் கேரள மற்றும் பீகார் மாநில ஆளுநரான ஆர்.எஸ். கவாயின் மகன்தான் பிஆர் கவாய். சட்டம் படித்துவிட்டு வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய கவாய், ஆகஸ்ட் 1992இல் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் உதவி அரசு வழக்கறிஞராகவும் 2000ல் நாக்பூர் பெஞ்சில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
முக்கிய தீர்ப்புகள்
அதன் பிறகு 2003இல் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2005இல் நிரந்தர நீதிபதியாகவும் ஆனார். 14 ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய இவர், 14 ஆண்டுகளுக்குப் பிறகு 2019இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதியான பிறகு, பல வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளை கவாய் வழங்கியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை உறுதி செய்த தீர்ப்பு மற்றும் தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவித்தது எனப் பல தீர்ப்புகளைக் குறிப்பிடலாம்.












Click it and Unblock the Notifications