மணிப்பூர் விவகாரம்: பிரதமர் பேசியது மட்டும் போதாது.. இந்த 2 ஆக்ஷன் கட்டாயம் வேணும்.. பொங்கிய ஒவைசி
டெல்லி: மணிப்பூர் இனப்படுகொலை நடப்பதாகவும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு பிரதமர் மோடி தள்ளப்பட்டு இருப்பதாகவும் ஐதராபாத் எம்.பி ஓவைசி ஆவேசமாக பேசியுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பிரேன் சிங் உள்ளார். பழங்குடியின மக்கள் இந்த மாநிலத்தில் அதிகம் வசிக்கின்றனர். இதில் குக்கி இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மைத்தேயி மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க குக்கி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரத்தால் கடந்த மே மாதம் 3ம் தேதி இரு பிரிவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த வன்முறை இன்னும் அடங்கவில்லை. இதனால் மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதத்திற்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், தான் நேற்று மணிப்பூரில் நடைபெற்ற கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.
அதாவது மணிப்பூரில் குக்கி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின மக்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லும் காட்சிகளுடன் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 4ம் தேதி நடந்த நிலையில் நேற்று வீடியோ வெளியாகி உள்ளது.
மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நடந்த சம்பவம் ஒட்டு மொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகளை எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் தேசத்திற்கே அவமானம் என்றும் தனது இதயம் கனக்கிறதது எனவும் குற்றவாளிகள் தப்பமுடியாது என்றும் பிரதமர் மோடியும் வேதனையுடன் தெரிவித்தார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, மணிப்பூர் விவகாரம் குறித்து ஐதாரபாத் எம்.பி ஓவைசி கூறுகையில், " இந்த வீடியோ வேகமாக பரவியதால் பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது. இனப்படுகொலை அங்கு நடைபெற்று வருகிறது. முதல்வர் பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்து விட்டு பிரதமர் மோடி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே நீதி நிலை நாட்டப்படும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications