கொரோனா காலத்தில் எதற்கு கன்வர் யாத்திரை? மக்களை குழப்ப வேண்டாம்.. யோகி அரசை சாடிய உச்ச நீதிமன்றம்
டெல்லி: கன்வர் யாத்திரைக்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதி அளித்துள்ளது குறித்துத் தானாக முன் வந்து வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம், கொரோனா காலத்தில் யாத்திரைக்கு அனுமதி அளித்தது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
நாட்டில் கொரோனா 2ஆம் அலை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வருகிறது. ஒவ்வொரு மாநில அரசும் தளர்வுகளை அறிவித்து வருகின்றனர்.
இருப்பினும், தளர்வுகள் அறிவிக்கும்போது மாநில அரசுகள் உட்சபட்ச கவனத்துடன் செயல்பட வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கன்வர் யாத்திரை
ஆண்டுதோறும் சிவன் பக்தர்கள் கன்வர் யாத்திரை என்ற பாத யாத்திரையை இரண்டு வாரங்களுக்கு நடத்துவது வழக்கம். அதில் நாடு முழுவதும் உள்ள பகுதிகளிலிருந்து கங்கை புனித நீரைப் பக்தர்கள் சேகரிப்பார்கள். இருப்பினும், கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு கன்வர் யாத்திரையை உத்தரகண்ட் அரசு ரத்து செய்தது.

உபி அரசு
ஆனால் கொரோனா அச்சுறுத்தலைத் தாண்டியும் உத்தரப் பிரதேசத்தில் யாத்திரைக்கு யோகி அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், கன்வர் யாத்திரையில் கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கன்வர் யாத்திரைக்குத் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடு்துக் கொண்டுள்ளது.

குழப்ப வேண்டாம்
இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதிகள் கூறுகையில், "கன்வர் யாத்திரைக்கு உத்தரகண்ட் அனுமதி மறுத்துள்ள நிலையில், யாத்திரையை நடத்த உ.பி. அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது கவலையளிக்கும் ஒரு விஷயம். கொரோனா காலத்தில் ஏன் இப்படியொரு முடிவு? இந்திய மக்கள் முற்றிலும் குழப்பத்தில் உள்ளனர். மக்களை மேற்கொண்டு குழப்ப வேண்டாம். கொரோனா மூன்றாம் அலை பற்றி அச்சம் இருப்பதால் எவ்வித சமரசமும் செய்ய முடியாது எனப் பிரதமர் கூறியுள்ள நிலையில், உபி அரசு எப்படி இந்த முடிவை எடுத்துள்ளது" என கேள்வி எழுப்பினர்.

விளக்கம் அளிக்க உத்தரவு
இது குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசு, உத்தரப் பிரதேச அரசு, உத்தரகண்ட் அரசு ஆகியவற்றுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். இது பற்றிக் கூடுதல் தலைமைச் செயலாளர் (தகவல்) நவ்னீத் சேகல் கூறுகையில், ஊடகங்கள் மூலம் மட்டுமே இதுவரை இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து முறையான அறிவிப்பு வெளியான பிறகு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications