இரு வழக்குகளில் ஒரே மாதிரி பதில் மனு.. அப்படியே காப்பி அடித்த சிபிஐ, அமலாக்கத் துறை.. கபில் சிபல்
டெல்லி: இரு வழக்குகளில் இரு அமைப்புகளும் ஒரே மாதிரியாக பதில் மனு தாக்கல் செய்துள்ளதை பார்க்கும் போது அப்படியே காப்பி அடித்துள்ளது நன்றாக தெரிகிறது என கபில் சிபல் வாதம் செய்தார்.
கடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் ரூ 3,500 கோடி முதலீடு செய்தது.

இந்த முதலீடு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதற்கு கார்த்தி சிதம்பரமும் உதவி செய்தார் என்றும் அதற்கு பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு பணம் கைமாறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் ப.சிதம்பரமும் கார்த்தியும் தொடர்ந்த முன்ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஓபி ஷைனி முன்பு, சிபிஐ சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே எம் நடராஜ் தனது வாதத்தை முன் வைத்தார்.
அவர் கூறுகையில் ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்து விசாரித்தால்தான் பல உண்மைகள் வெளியே வரும். ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தேசநலன் சார்ந்தது. நாளை வரை சிபிஐ காவலை நீட்டிக்க மட்டுமே உத்தரவிட வேண்டும் என்றார்.
அப்போது ப. சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தன் வாதத்தில், சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய இரண்டு அமைப்புகளும் ஐஎன்எக்ஸ், ஏர்செல் மேக்சிஸ் வழக்குகளில் ஒரே மாதிரியான பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.
அதாவது தற்போது 17 வங்கிக் கணக்குகள், 10 வெளிநாட்டு சொத்துகள் என பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளதை பார்த்தால் இரு விசாரணை அமைப்புகளும் அப்படியே காப்பி அடித்துள்ளார்கள். மேலும் இவர்களிடம் ஆதாரம் ஏதும் இல்லை என தெரிகிறது என வாதம் செய்தார்.












Click it and Unblock the Notifications