காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா
டெல்லி: கர்நாடகாவில் வெயில் தகிப்பதைப் போல, அம்மாநில காங்கிரஸ் அரசிலும் வெப்பம் தகிக்கத் தொடங்கியுள்ளது. எங்களுக்கு எல்லாம் அமைச்சர் பதவியே கிடைக்காதா என்கிற குமுறலோடு சுமார் 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். கர்நாடக அமைச்சரவையை மாற்றி அமைக்கக் கோரி, மேலிடத்திற்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ள இந்த மேட்டர், சித்தராமையா அரசுக்கு ஒரு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் சித்தராமையா காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு எதிர்க்கட்சியான பாஜகவைச் சமாளிப்பதை விடச் சொந்த கட்சியைச் சமாளிப்பதே சித்தராமையாவுக்கு பெரிய சிக்கலாக மாறியுள்ளது. எதிர்க்கட்சியினரை விடச் சொந்த கட்சியினரே சித்தராமையா தூக்கத்தைக் கெடுத்து வருகிறார்கள் எனக் கூட சொல்லலாம்.

சித்தராமையாவுக்கு தலைவலி
கோபித்துக் கொண்டு அடிக்கடி டெல்லிக்குச் சென்றுவிடும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை சமாளிப்பதே பெரும் போராட்டமாக சித்தராமையாவுக்கு இருக்கிறது. கடந்தாண்டு தான் சித்தராமையாவுக்கு பதிலாக டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவியைத் தர வேண்டும் எனச் சொல்லி போர்க்கொடி தூக்கினார்கள். அந்த பஞ்சாயத்து முடிவுக்கு வரவே பல வாரங்கள் ஆனது. இந்தச் சூழலில் தான் மீண்டும் ஒரு பஞ்சாயத்துப் புதிதாக வெடித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முதலே டெல்லிக்குச் செல்ல தொடங்கிய காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள், இப்போது டெல்லில் உள்ள கர்நாடக பவனில் முகாமிட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை ஒரு 'மெகா' பிரேக்பாஸ்ட் மீட்டிங் நடத்திவிட்டு, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர்கள் கே.சி.வேணுகோபால் மற்றும் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.
ராகுல் காந்தி
இதற்கிடையில் பெங்களூரில் இருந்து டெல்லிக்குச் செல்லும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். நேரம் கிடைத்தால் ராகுல் காந்தியையும் சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளிக்கக் காத்திருக்கின்றனர்.
இந்த டெல்லி பயணத்தின் பின்னணியில் இருக்கும் முக்கியக் கோரிக்கைகள் என்றால் ஒன்று தான்.. அதாவது அமைச்சரவையில் பழைய முகங்களுக்குப் பதில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்.. சிலர் 3, 4, ஏன் 5 முறை கூட அமைச்சராகிவிட்ட நிலையில், இதுவரை வாய்ப்பு கிடைக்காத தங்களுக்கு இப்போது முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிறார் எம்.எல்.ஏ பெலூர் கோபாலகிருஷ்ணா.
ஆதங்கம்
மற்றொரு எம்.எல்.ஏவான அசோக் பட்டன் கூறுகையில், "கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவை மாற்றப்படும் என முதல்வர் சித்தராமையா சொல்லியிருந்தார். ஆனால் தேர்தல்கள், சட்டமன்றக் கூட்டத்தொடர் என இப்போது மூன்று ஆண்டுகளே ஆகப்போகிறது. இனியும் எங்களால் காத்திருக்க முடியாது" எனத் தனது ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார்.
அமைச்சரவை
இந்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் குழு, அமைச்சரவையில் ஒரு சிறிய மாற்றத்தை மட்டும் விரும்பவில்லை. கிட்டத்தட்ட 25 அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்கிற மெகா கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது என்று அவர்கள் சொன்னாலும், டெல்லியில் திரண்டுள்ள இவர்கள் சித்தராமையாவுக்கு புதிய தலைவலியாகவே மாறியுள்ளனர். கர்நாடக அமைச்சரவையில் 'பூகம்பம்' வெடிக்குமா அல்லது மீண்டும் 'சமாதானம்' பிறக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
கர்நாடகாவில் கடந்த 2023ல் சட்டசபைத் தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸ் வென்ற போதிலும் யார் முதல்வர் என்ற ரேஸில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் என இருவரும் இருந்தனர். இதனால் தேர்தல் முடிந்து சில நாட்கள் வரையிலும் கூட குழப்பம் இருந்தது. டெல்லி தலைமை தலையிட்ட சமாதானம் செய்த பிறகே, சித்தராமையா முதல்வர் பதவியை ஏற்றார். டிகே சிவக்குமார் துணை முதல்வராகப் பதவியேற்றார்.












Click it and Unblock the Notifications