சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் கர்நாடகா மாஜி முதல்வர் எடியூரப்பா கைதா? சிஐடி சம்மன்!
டெல்லி: சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா விசாரணைக்கு இன்றே ஆஜராக வேண்டும் என அம்மாநில சிறப்பு புலனாய்வுக் குழு- சிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் போக்சோ சட்டத்தின் கீழ் எடியூரப்பா கைது செய்யப்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
கர்நாடகா மாநில பாஜகவின் அடையாளமாக இருப்பவர் அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா. கடந்த சில மாதங்களுக்கு எடியூரப்பா மீது ஒரு சிறுமியின் தாய் போலீசில் புகார் கொடுத்தார். அதில், வேலை உதவி தொடர்பாக எடியூரப்பாவை சந்திக்க சென்ற போது தமது 17 வயது மகளுக்கு எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்தார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் தம் மீதான பாலியல் புகாரை எடியூரப்பா திட்டவட்டமாக மறுத்தார். தேர்தல் நேரத்தில் திட்டமிட்டே இத்தகைய புகார் கொடுக்கப்படுவதாகவும் எடியூரப்பா குற்றம் சாட்டி இருந்தார். இதனிடையே எடியூரப்பா மீது கர்நாடகா போலீசார் வழக்கும் பதிவு செய்தனர். அத்துடன் இந்த வழக்கை கர்நாடகா மாநில சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் எடியூரப்பா மீது புகார் கொடுத்த சிறுமியின் தாயார் திடீரென மரணம் அடைந்தார். ஆனால் நுரையீரல் புற்றுநோய் காரணமாகவே அந்த சிறுமியின் தாயார் மரணம் அடைந்தார் எனவும் கூறப்பட்டது. இது எடியூரப்பா வழக்கில் மேலும் பரபரப்பை கிளப்பிவிட்டது.
இதனிடையே சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் எடியூரப்பாவைக் கைது செய்ய கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அவரது பெற்றோர் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் எடியூரப்பாவை பாலியல் தொல்லை வழக்கில் விசாரணைக்கு அழைத்திருக்கிறது சிறப்பு புலனாய்வுக் குழு. இதற்கான சம்மன் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் எடியூரப்பா கைது செய்யப்படலாம் என்கிற பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications