கரூருக்கு விஜய் தாமதமாக வந்தது ஏன்? ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் CBI துருவி துருவி 8 மணி நேரமாக விசாரணை
டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜராகினர். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் 8 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நாளையும் (செவ்வாய்க்கிழமை) விசாரணை தொடர்கிறது.
மேலும், தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் உள்ளிட்டோரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகினர். சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில் டெல்லியில் விசாரணைக்காக ஆஜராகி விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர்களின் விசாரணையை, உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய குழு கண்காணித்து வருகிறது.
இந்த வழக்கில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 29) நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாநில இணைச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி செல்வராஜ், கரூர் நகர ஆய்வாளர் ஜி.மணிவண்ணன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், கரூர் ஆட்சியர் மீ.தங்கவேல் இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று (திங்கட்கிழமை) அவர் விசாரணைக்கு ஆஜராகினார்.
இன்று ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் இந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் ஆகியோரிடம் 8 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கரூர் பிரச்சாரக் கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது பற்றியும், 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்ட நிலையில், 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை கூடியது குறித்தும், அனுமதி மீறல் குறித்தும் அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. 8 மணி நேரம் விசாரணை முடிந்து அவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, அவர்களிடம் நாளையும் (செவ்வாய்க்கிழமை) விசாரணை தொடர்கிறது.












Click it and Unblock the Notifications