கேரளாவை உலுக்கும் பினராயி விஜயனின் சனாதன எதிர்ப்பு-கை கோர்த்த பாஜக, காங்கிரஸ்- உதயநிதிக்கும் குட்டு!
டெல்லி: தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரளாவை உலுக்கி எடுக்கிறது சனாதன தர்மம் எதிர்ப்பு, பிராமணர் ஆதிக்கம் தொடர்பான விவாதங்கள். கேரளாவின் ஶ்ரீநாராயண குரு மடம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், சனாதன தர்மம் என்பது ஜாதி அடிப்படையிலானது; பிராமணர் மேலாதிக்கத்தை நிலை நிறுத்த உருவாக்கப்பட்டது என பேசியதற்கு எதிராக பாஜகவும் காங்கிரஸும் கை கோர்த்துக் கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
சனாதன தர்மத்தை ஒழிப்போம் என தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வட இந்தியாவில் தேர்தல் பிரசாரங்களில் பிரதமர் மோடி முதல் அனைத்து மத்திய அமைச்சர்களும் தற்போது வரை உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சை முன்வைத்து விமர்சித்து வருகின்றனர்.

இந்த வரிசையில் தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரளாவிலும் சனாதன தர்மம் எதிர்ப்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கேரளா சீர்திருத்தவாதியான ஶ்ரீநாராயண குருவின் மடம் சார்ந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், ஜாதி அடிப்படையிலானதுதான் சனாதன தர்மம். நாராயண குரு எந்த ஒரு மதத்தின் பிரதிநிதியும் அல்ல. சனாதன தர்மத்தை ஒருபோதும் நாராயண குரு பின்பற்றியவரும் இல்லை. பிராமணர் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவே சனாதான தர்மம் உருவாக்கப்பட்டது. சனாதன தர்மத்துடன் நாராயண குருவை ஒருங்கிணைப்பதும் அடையாளப்படுத்துவதும் அவரையே அவமதிப்பதாகும் என்றார்.
மேலும் நாராயண குருவின் துறவு வாழ்க்கை என்பது நால்வருண பேதத்தை வலியுறுத்தக் கூடிய சனாதன தர்ம அமைப்பைக் கேள்விக்குறியாக்கக் கூடியது. அந்தக் கட்டமைப்பை மீறக் கூடியது. அவரை ஒரு மதத் தலைவராக்க மதிப்பிடுதல் அவரை மதிப்பதாகும் என்றார் பினராயி விஜயன்.
பினராயி விஜயனின் இந்தப் பேச்சுக்குதான் பாஜக, காங்கிரஸ், விஹெச்பி உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பாஜகவினரோ பினராயி விஜயனின் உருவபொம்மை எரித்துள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் பேச்சின் தொடர்ச்சி
கேரளா பாஜகவின் முன்னாள் தலைவர் வி.முரளீதரன் கூறுகையில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதன் தொடர்ச்சிதான் தற்போது பினராயி விஜயன் பேசியிருப்பது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வாக்கு வங்கி அரசியலுக்காகத்தான் பினராயி விஜயன் இப்படி சனாதனத்தை அவமதிக்கிறார். இதேபோல பினராயி விஜயனால் பிற மதங்களை அவமதித்துவிடவா முடியும் என்றார்.
பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பூனாவாலா கூறுகையில், தமிழ்நாட்டில் இருந்து இதேபோல சனாதன எதிர்ப்பு குரல் எழுந்தது. சனாதனத்தை எதிர்ப்பவர்கள் இந்தியா கூட்டணியில்தான் இருக்கின்றனர். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் இப்படி பேசக் கூடாது என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சதீஷன், சனாதன தர்மம் என்பது இந்துக்களின் பாரம்பரியத்தின் கலாசாரத்தின் ஒரு அங்கம். இதனை அவமதிப்பதை ஏற்க முடியாது என்றார்.
சனாதன எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் பினராயி
இத்தனை எதிர்ப்புகள், உருவபொம்மை எரிப்புகளுக்கு இடையேயும் சனாதன தர்மத்தை எதிர்க்கும் தமது நிலைப்பாடு உறுதியானது; ஒரு போதும் சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்துகளை திரும்பப் பெற முடியாது என திட்டவட்டமாகவே தெரிவித்துள்ளார் பினராயி விஜயன். அத்துடன் அன்றைய பிராமணீய மேலாதிக்கம் மீண்டும் தலைதூக்க முயற்சிப்பதை ஏற்க முடியாது என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நாராயண குருவும் ஈழவா வாக்கு வங்கியும்
நாராயண குரு சீர்திருத்தவாதியாக திகழ்ந்தார். கேரளாவில் 25% வரை உள்ள ஈழவா சமூகத்தைச் சேர்ந்தவர். ஈழவா வாக்குகள் எப்போதும் இடதுசாரிகளுக்குதான் கிடைத்து வருகிறது. இதனை அறுவடை செய்வதற்காக வெல்லாபள்ளி நடேசன் தொடங்கி பல்வேறு கட்ட முயற்சிகளை ஈழவா சமூகத்துக்குள் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் ஈழவா வாக்குகளை இடதுசாரிகளிடம் இருந்து பிரிக்க முடியாத நிலை இருக்கிறது. இதனால்தான் ஈழவா வாக்குகளை முன்வைத்து இடதுசாரிகள்- பாஜக- காங்கிரஸ் நாராயண குரு விவகாரத்தில் தீவிரமாக களமாடுகின்றன.












Click it and Unblock the Notifications