ஆஸ்திரேலியாவில் தேசியக் கொடியுடன் போராடிய இந்தியர்களை ஓட ஓட தாக்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகள்!
ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தி உள்ளனர்.
டெல்லி: ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் தொடர்ந்து இடிக்கப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்திய இந்தியர்கள் மீது சீக்கியர்களுக்கு தனிநாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூரமாக தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1980களில் இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனிநாடு கோரி உருவானது காலிஸ்தான் ஆயுத குழு. பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை ஒருங்கிணைத்து காலிஸ்தான் என்கிற சீக்கியர் தனிநாடு உருவாக்க வேண்டும் என்பது இதன் கொள்கை. இந்த ஆயுதக் குழுவை பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் அழித்தொழித்தார். இதனாலேயே இந்திரா காந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தியாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் தடை செய்யப்பட்டு வேட்டையாடப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அரசியல் அகதிகளாக சென்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் தஞ்சமடைந்தனர். காலிஸ்தான் தனிநாட்டுக்கான பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து பல்வேறு பெயர்களில் இந்த பயங்கரவாதிகள் செயல்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக நமது நாட்டில் மீண்டும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் தலையெடுக்க தொடங்கியுள்ளனர். பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் காலிஸ்தான் தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் பிடிபட்டனர். பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் காலிஸ்தான் இயக்க முழக்கங்கள், கொடிகள் பறக்கவிடப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட காலிஸ்தான் ஸ்லீப்பர் செல்கள் டெல்லி வீதிகளில் தங்களது வேலையைக் காட்டினர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவிலும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த சில வாரங்களாக இந்தியர்களின் கோவில்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இது ஆஸ்திரேலியாவில் வாழும் இந்துக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த பயங்கரவாத செயல்களுக்கு மத்திய அரசும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இதனிடையே இந்து கோவில்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து மெல்போர்னில் ஆஸ்திரேலியாவில் இந்துக்கள், நமது நாட்டின் தேசிய கொடியுடன் போராட்டம் நடத்தினர். அமைதியாக நடந்த இந்தப் போராட்டத்துக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள், போராட்டக்காரர்கள் மீது கொடூரமாக தாக்கினர். தேசிய கொடியை கைகளில் பிடித்தபடி உயிருக்கு அஞ்சி ஓடியவர்களை விடாமல் துரத்தி துரத்தி காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்துக்கள் மீதான இந்த தாக்குதலுக்கு பாஜகவின் மஜிந்தர் சிங் சிர்சா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மஜிந்தர்சிங் சிர்சா, ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவு கும்பலின் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டிக்கிறோம். அமைதியான போராட்டங்களை சமூகவிரோதிகள் சீர்குலைத்து வருகின்றனர். இந்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
"பதற்றம்.." இந்து கோயில் அவமதிப்பு.. பிரதமர் மோடிக்கு எதிராக வாசகம்.. காலிஸ்தான் ஆதரவாளர்கள் பரபர