விரைவு தீர்ப்பு தான் தேவை.. பெண் டாக்டர் பலாத்கார கொலையால் நீதிமன்றங்களுக்கு மோடி வைத்த ‛டிமாண்ட்’
டெல்லி: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சார்பில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார். கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் பிரதமர் மோடி உச்சநீதிமன்றத்துக்கு இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
உச்சநீதிமன்றம் உருவாகி 75 ஆண்டு நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் 75 ரூபாய் மதிப்பிலான நினைவு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிட மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து அனைத்து மாநிங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள் பங்கேற்கும் வகையில் 2 நாள் தேசிய மாநாடு என்பது டெல்லி பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கியது.

உச்சநீதிமன்றம் சார்பில் இந்த மாநாடு என்பது நடத்தப்படும் நிலையில் பிரதமர் மோடி பங்கேற்று தொடங்கி வைத்தார். அதன்பிறகு பிரமதர் மோடி உச்சநீதிமன்றத்தின் 75 ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் 75 ரூபாய் மதிப்பிலான நாணயம், தபால் தலையை வெளியிட்டார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது: நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் தீவிர கவலையை ஏற்படுத்தி உள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நாட்டில் பல சட்டங்கள் இருந்து வருகிறது. அதனை நாம் கடுமையாக செயல்படுத்த வேண்டும்.
"75 ரூபாய் நாணயம்".. உச்சநீதிமன்றத்தின் நினைவாக வெளியிட்ட பிரதமர் மோடி! சுவாரசிய பின்னணி
2019ம் ஆண்டில் விரைவு நீதிமன்றங்களுக்கு என்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்கீழ் சாட்சி மையங்கள் (witness deposition centres) தொடங்கப்பட்டன. தற்போது மாவட்ட கண்காணிப்பு குழு பலப்படுத்தப்படுவதையும், பெண்களின் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் விரைவாக தீர்ப்பு வழங்குவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளில் விரைவாக தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வளவு விரைவாக தீர்ப்பு வழங்கப்படுகிறதோ அந்த அளவுக்கு அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கும். இதனால் நீதி வழங்குவதில் உள்ள தாமதங்களை அகற்றவும், நீதித்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும’’ என தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜி கார் மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது சஞ்சய் ராய்க்கு உடனடியாக மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் தான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications