தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் உட்பட இருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றனர்
டெல்லி: தமிழ்நாட்டில் சட்டம் பயின்று, தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கடந்த 20 ஆண்டுகளாக உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வரும் கேரளாவை சேர்ந்த கே.வி.விஸ்வநாதன் இன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கிறார். இவருடன் ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரஷாந்த் மிஸ்ராவும் பதவியேற்றனர்.
உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகள் பணியிடங்கள் இருக்கின்றன. இதில் சமீபத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் ஓய்வு பெற்றனர். இதனால் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 32ஆக குறைந்தது. மேலும் எதிர்வரும் அடுத்தடுத்த நாட்களில் நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, வி.ராசுப்பிரமணியன், கிருஷ்ண முரளி ஆகியோர் ஓய்வுபெற இருக்கிறார்கள். இதனால் உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக குறைந்து விடும். இந்நிலையில் புதியதாக இரண்டு நீதிபதிகளின் பெயரை கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது.

இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு 48 மணி நேரத்திற்குள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது. அவரும் உடனடியாக இந்த பரிந்துரைக்கு அனுமதி அளித்தார். இதனையடுத்து இன்று (மே.19) இருவரும் நீதிபதிகளாக பதவி ஏற்கின்றனர். தற்போது இருக்கும் நீதிபதிகளில் மிகவும் ஜூனியர் ஜாம்ஷெட் பர்ஜோர் பர்டிவாலாதான். இவரது பதவிக்காலம் 2030ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, அந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தின் சீனியாராக ஜாம்ஷெட் பர்ஜோர் பர்டிவாலாவுக்கு அடுத்து விஸ்வநாதன்தான் இருப்பார். எனவே இவர் தலைமை நீதிபதியாக வாய்ப்பும் இருக்கிறது.
இப்படியாக அவர் தலைமை நீதிபதியாக ஆனால், முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்குப் பிறகு இந்த பொறுப்பை வகிக்கும் கேரளத்தை சேர்ந்த இரண்டாவது நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1966ம் ஆண்டு கேரள மாநிலம் கல்பாத்தியில் இவர் பிறந்தார். பிறந்தது கேரளமாக இருந்தாலும் கல்வி, வேலை எல்லாம் தமிழ்நாட்டில்தான் செய்தார். கோவை சட்டக்கல்லூரியில் சட்ட படிப்பை முடித்த இவர் 1998ம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சில் வழக்கறிஞராக பதிவு செய்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக ஆஜராகி வாதாடி வரும் இவர், குற்றவியல் சட்டம், அரசியலமைப்புச் சட்டம், வணிகச் சட்டம், திவால் சட்டம் உள்பட பல்வேறு சட்டம் சார்ந்த வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவராக அடையாளம் காணப்படுகிறார்.












Click it and Unblock the Notifications