லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை.. குடியரசுத் தலைவரை சந்தித்த ராகுல்.. காங்.கின் அடுத்த மூவ் என்ன?
டெல்லி: லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலைக்கு நீதி கேட்டு காங்கிரஸ் தலைவர்கள் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.
லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மத்திய இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பெயில் மறுக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நடந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. இங்கு நடந்த விவசாய போராட்டத்தின் போது விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையில் நடந்த மோதலில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.

லக்கிம்பூர்
இந்த நிலையில் லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலைக்கு நீதி கேட்டு காங்கிரஸ் தலைவர்கள் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர். இது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் மனு அளித்த ராகுல் காந்தி, இந்த கொலை குறித்து நீதிமன்ற குழுதான் விசாரிக்க வேண்டும்.

சந்திப்பு
போலீசார் விசாரணை நடத்தினால் இது நியாயம் கிடையாது. இரண்டு நீதிபதிகள் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா இந்த வழக்கில் தொடர்புடையதால் அவர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும். அப்போதுதான் விசாரணை நியாயமாக நடக்கும். விவசாயிகளின் போராட்டத்திற்கு செவி மடுத்து மூன்று விவசாய சட்டங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சியினரின் மனுக்களை வாங்கிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடனடியாக இது தொடர்பாக மத்திய அரசிடம் ஆலோசனை செய்வேன் என்று உறுதி அளித்தார். லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை மற்றும் விவசாயிகள் போராட்டம் காங்கிரஸ் கட்சிக்குள் புதிய எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில் இது காங்கிரஸ் கட்சி வரும் நாட்களில் பிரச்சாரங்களை, போராட்டங்களை முன்னெடுக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

தேர்தல்
உத்தர பிரதேச தேர்தல் வர உள்ளதை அடுத்து லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலையை மையமாக வைத்து வரும் நாட்களில் காங்கிரஸ் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி இதை மையமாக வைத்த உத்தர பிரதேச தேர்தல் திட்டங்களை வகுக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் நேரடியாக மத்திய இணை அமைச்சரின் மகனே கைது செய்யப்பட்டு இருப்பதால் பாஜக கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications