தேர்தல் வரை தான் எல்லாம்... பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயரும்... ஆர்.ஜே.டி. ஆருடம்..!
டெல்லி: பெட்ரோல் டீசல் விலை மீதான கலால் வரியை குறைத்திருப்பது மத்திய அரசின் தேர்தலுக்கான நாடகம் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சாடியுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு விவகாரத்தில் மத்திய அரசின் நடிப்பு போதாது என கிண்டல் செய்துள்ள அவர், உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு வரும் என கணித்துள்ளார்.
உடல்நல பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு வந்த அவர் அங்கு இதனைக் கூறியுள்ளார். கலால் வரியை மட்டும் குறைப்பதால் மக்களுக்கு சுமை குறையப்போவதில்லை என்றும் கலால் வரி குறைப்பு போதாது எனவும் லாலு பிரசாத் யாதவ் கூறியிருக்கிறார்.
பெட்ரோலுக்கு 5 ரூபாய் டீசலுக்கு 10 ரூபாயும் கலால் வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் அதனை குறைக்க வேண்டும் என மத்திய அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.50-க்கு விற்கப்பட்டால் தான் மக்களுக்கு உண்மையிலேயே சுமை குறையும் என்றும் உ.பி. தேர்தலுக்கு பிறகு விலை உயர்வு நிச்சயம் நடக்கும் என ஆருடம் கூறியிருக்கிறார்.
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு... மோடி அரசின் நாடகம்...ரூ.50 குறைத்தால் நிம்மதி... லாலு தாக்கு
இதனிடையே இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பீஹார் மாநில முன்னாள் துணை முதலமைசர்ர் தேஜஸ்வி யாதவ், பெட்ரோல் விலை ரூ.70-க்கு ஆவது கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே அடுத்தாண்டு உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன் தினம் வெளியான இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை மீதான கலால் வரி அதிரடியாக குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.