தமிழ்நாட்டு மக்கள் எழுச்சிக்கு முன்னரே ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும்: டி.ராஜா எச்சரிக்கை
டெல்லி: தமிழ்நாட்டு மக்கள் எழுச்சியை எதிர்கொள்வதற்கு முன்னரே மத்திய பாஜக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்று மூத்த இடதுசாரித் தலைவர் டி.ராஜா வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் நேற்று ஆளுநர் தன்னிசையாக உரை வாசித்தார். இதனை கண்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து அது நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது அதிருப்தி அடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இது மிகப் பெரும் சர்ச்சையானது.
முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் அவர்களுக்கு வரைவு உரையானது, தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்கெனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு, அதன்பின்னர் அச்சடிக்கப்பட்டு இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன. நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் ஆளுநரின் செயல்பாடுகள், முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், அரசின் சார்பாக இருக்கின்ற காரணத்தால், நாங்கள் சட்டமன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி, ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களது எதிர்ப்பு எதனையும் நாங்கள் பதிவு செய்யவில்லை.பேரவையிலே மிகவும் கண்ணியத்தோடு, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உரையாற்ற வந்துள்ள ஆளுநர் முழு மரியாதை அளிக்கும் வகையில் நாங்கள் நடந்து கொண்டோம். ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல - அரசின் கொள்கைகளுக்கே கூட அவர் மாறாக நடந்து கொண்டு, தமிழ்நாடு அரசு தயாரித்து, ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக, முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும். ஆகவே, சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, இன்றைக்கு அச்சிடப்பட்டு, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும், அவைக்குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும்,அதேபோல, இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என அந்த கண்டனத் தீர்மானத்தின் மீது பேசினார். முதல்வர் ஸ்டாலின் பேசி முடிப்பதற்குள்ளாகவே சட்டசபையைவிட்டு ஆளுநர் வெளியேறினார்.
தமிழ்நாட்டு ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேற்றே போராட்டங்கள் நடைபெற்றன. இன்று 2-வது நாளாக பல இடங்களில் ஆளுநர் ரவியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. புதுச்சேரியிலும் இதேபோல் போராட்டங்கள் நடந்தன. உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. இதற்கு பாஜகவினரும் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் டி.ராஜா. அப்போது தமிழ்நாட்டு ஆளுநர் செயல்பாட்டை அவர் வன்மையாகக் கண்டித்தார். மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஆளுநராக இருக்க ரவி தகுதியற்றவர். தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் அரசியல் குறித்து ஆளுநர் ரவிக்குத் தெரியவில்லை. ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெறாவிட்டால் மக்கள் எழுச்சியைச் சந்திக்க நேரிடும். தமிழ்நாடு ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்ப உள்ளோம் என எச்சரித்தார் டி.ராஜா.
தவறு.. வெளியே வாங்க! சுதாரித்த ஸ்டாலின்.. ரவி உரைக்கு எதிராக அந்த நொடியே தீர்மானம் தயாரானது எப்படி?