எல்ஐசி பங்குகள் விற்பனை...வெட்கக் கேடானது...மத்திய அரசை விளாசும் ராகுல் காந்தி!!
மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசியின் 25 சதவீத பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு முன்வந்து இருப்பதை கடுமையாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து இந்தியில் இன்று ட்வீட் செய்து இருக்கும் ராகுல் காந்தி, ''பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கு என்று ''செல் கவர்ன்மென்ட் கம்பெனியை'' மத்திய அரசு நடத்தி விளம்பரம் செய்து வருகிறது, நாடு தற்போது எதிர்கொண்டு இருக்கும் பொருளாதார நெருக்கடியை ஈடுகட்டுவதற்கு என்று அரசு துறை நிறுவனங்களை விற்று வருகிறது.

மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்காலத்தை சிக்கலுக்கு உள்ளாக்கும் வகையில் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியை விற்பது வெட்கக் கேடானது'' என்று பதிவிட்டுள்ளார்.
அரசு துறை நிறுவனங்களை தனியார் மையம் ஆக்குவதற்கு கடந்த திங்கள் கிழமை ராகுல் காந்தி கடுமையான கண்டனம் தெரிவித்து இருந்தார். இதனால், வேலை வாய்ப்பு இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இன்று எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை நிறுவனமான பிபிசிஎல் நிறுவனத்தில், தனது மொத்த பங்குகளான 52.98 சதவீதத்தை விற்பதற்கு மத்திய அரசு முன் வந்து இருப்பதை ராகுல் காந்தி முன்பு கண்டித்து இருந்தார். இதையடுத்து ட்வீட் செய்திருந்த ராகுல் காந்தி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தேவைப்படுகிறது. ஆனால் மோடி அரசு அதை சீர்குலைக்கிறது. இத்துடன் அரசு பொதுத்துறையின் முதலீட்டை அழிக்கிறது என்று தெரிவித்து இருந்தார்.
மேலும் பொருளாதார நடவடிக்கை என்ற பெயரில் ஸ்டேட் வங்கி ஊழியர்களுக்கு விஆர்எஸ் வழங்குவதை முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கடுமையாக எதிர்த்து இருந்தார். பொருளாதாரம் சீரழிந்து, வேலை வாய்ப்பை இழந்து வரும் நிலையில் மத்திய அரசு எடுத்து இருக்கும் இந்த முடிவு மிகவும் கொடூரமானது என்று தெரிவித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications