பழுத்த அரசியல்வாதி.. நிறைந்த அனுபவம் கொண்ட நிதியமைச்சர்.. ஜனாதிபதியாக உயர்ந்து.. மறைந்த பிரணாப்!
டெல்லி: பழுத்த அரசியல்வாதியாகவும் நிறைந்த அனுபவம் கொண்ட நிதியமைச்சராகவும் நாட்டிற்கு சேவையாற்றிய முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி (84) கடந்து வந்த பாதை குறித்து தெரிந்து கொள்வோம்.
Recommended Video
பிரணாப் முகர்ஜிக்கு கடந்த 10-ஆம் தேதி மூளையில் கட்டியிருந்த ரத்தம் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. இத்துடன் அவருக்கு கொரோனாவும் உறுதியானது. அவர் தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் இருந்தார்.
இவர் நலம்பெற நாடு முழுவதும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரிலும் போனிலும் பிரணாபின் மகளிடம் நலம் விசாரித்தனர். கட்சி பேதமின்றி போற்றும் இந்த பிரணாப் முகர்ஜி யார் என்பதை பார்ப்போம்.

சட்டம் பயின்றவர்
பிரணாப் முகர்ஜி கடந்த 1935ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி பிறந்தவர். இவர் மேற்கு வங்கத்தில் மிராட்டியில் பிறந்தார். இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துள்ளார். 1957-ஆம் ஆண்டு சுவ்ராவை மணந்தார். இவர்களுக்கு அபிஜித், இந்திரஜித் என்ற இரு மகன்களும், ஷர்மிஷ்தா என்ற மகளும் உள்ளனர். அபிஜித் மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்பியாக உள்ளார்.

ராஜ்யசபை எம்பி
1969ஆம் ஆண்டு இந்திரா காந்தியால் ராஜ்யசபை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார் பிரணாப். அதன்பின்னர் 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளிலும் அவர் ராஜ்யசபைக்கு தேர்வானார். 2004-ஆம் ஆண்டு 14ஆவது மக்களவைக்கு மேற்கு வங்கத்தில் ஜங்கிப்பூர் லோக்சபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2009ஆம் ஆண்டு 15ஆவது மக்களவைக்கு மீண்டும் அதே தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.

அமைச்சரவை
இந்திரா காந்தியின் அமைச்சரவையில் 1982- 84-இல் நிதி அமைச்சராக பணியாற்றினார். இந்திராவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர். இந்திரா மறைவுக்கு ராஜீவ் காந்தியால் ஓரங்கட்டப்பட்டதால் 1986- 1989-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ராஷ்ட்ரீய சமாஜ்வாடி காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். பின்னர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு பிறகு நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது மீண்டும் காங்கிரஸுக்கு வந்த பிரணாப் திட்டக்குழு துணை தலைவராக 1991-96 வரையும் வெளியுறவுத் துறை அமைச்சராக 1995-96 வரையும் இருந்தார். 2009-2009- ஆம் ஆண்டு பாதுகாப்பு துறை அமைச்சராகவும், 2009-2012 ஆம் ஆண்டு இந்தியாவின் நிதியமைச்சராவும் இருந்தவர்.

பிரணாப்
2012-ஆம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தலில் பதிவான 10.29 லட்சம் வாக்குகளில் 69 சதவீதம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் பிரணாப். இதன் மூலம் 13-ஆவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார். 2017-இல் பிரணாப்பின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் அடுத்த ஜனாதிபதியாக அவரை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவரோ வயோதிக உடல்நிலை பாதிப்பால் மீண்டும் போட்டியிட மறுத்துவிட்டார்.

பாரத ரத்னா
ஜூன் 2018-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் ஆவார். சுமார் 50 ஆண்டுகள் அரசியலில் இருந்த பிரணாப்பிற்கு 2019-ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவை தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இலக்கியம்
அரசியலுடன் இலக்கியத்திலும் ஆர்வம் இருந்த பிரணாப், இதுவரை 6 புத்தகங்களை எழுதியுள்ளார். பியான்ட் சர்வைவல்: எமெர்ஜிங் டைமன்சன்ஸ் ஆப் இந்தியன் எக்கனாமி -1984, ஆஃப் தி டிராக்- 1987, சாகா ஆஃப் ஸ்ட்ரக்கிள் அண்ட் சேக்ரிஃபைஸ்- 1992, சேலஞ்சஸ் பிஃபோர் தி நேஷன் -1992, தாட் அண்ட் ரிப்லெக்சன்ஸ் 2014, தி டிராமடிக் டிகேட்: தி இந்திரா காந்தி இயர்ஸ் 2014 ஆகியவை ஆகும்.












Click it and Unblock the Notifications