வோட்டர் ஐடி- ஆதார் எண் இணைக்காவிட்டால்.. லிஸ்டில் இருந்து பெயர் நீக்கமா? மத்திய அரசு அளித்த விளக்கம்
டெல்லி: வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் வாக்காளர் அடையாள அட்டை - ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆதார் எண் இணைக்காவிட்டாலும் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள், இரட்டை பதிவு உள்ளிட்ட குழப்பங்களை களைவதற்காக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அந்தவகையில், கடந்த வருடம் ஆகஸ்ட் 1-ம் தேதி ஆதார் இணைப்புக்கான விண்ணப்பங்கள் பெறும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. அலுவலர்கள் நேரடியாக வீடுவீடாகச் சென்று விண்ணப்பங்களைப் பெற்றனர். அத்துடன் மொபைல் செயலி மூலமாகவும் ஆதார் தகவல்களைப் பதிவு செய்தனர். மேலும், ஆன்லைனிலும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளர்களின் ஆதார் எண்களை சேகரித்தனர்.சிறப்பு முகாம்களும்நடத்தப்பட்டன. www.nvsp.in என்ற இணையதளம் வழியாக, 'Voter Help Line' எனும் செயலி வழியாகவும் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்யலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

எனவே, இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை இணைப்பதற்காக அவற்றை பெறும் பணி, கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் இந்த நடவடிக்கைகள் முடிவடையும் என்று இந்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்திருந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது;- வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. வாக்காளர் அடையாள அட்டை - ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆதார் எண் அளிப்பதற்கான கால அவகாஅசம் அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. ஆதார் எண் இணைக்காவிட்டாலும் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது" என்றார். அதேபோல், மற்றொரு கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த கிரண் ரிஜிஜூ, "மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் இருக்கும் சட்டம் இயற்றும் துறை மசோதாவை உருவாக்கும் பணியை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மசோதாவை உருவாக்கும் பணியில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுடன் உதவியை பெறும் திட்டம் எதுவும் இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications