சிறையிலேயே இருங்க.. கெஜ்ரிவாலுக்கு டெல்லி கோர்ட் தந்த ஷாக்.. செப்.,3 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
டெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐயால் கைதாகி உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் பெற்று அவர் வெளியே வர முயன்று வருகிறார். இத்தகைய சூழலில் தான் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 3ம் தேதி வரை நீட்டிப்பு செய்து அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். தற்போது டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி தலைவர்களுக்கு புதிய மதுபான கொள்கை தொடர்பான ஊழல் வழக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது டெல்லியில் 2021ம் ஆண்டு புதிய மதுபான கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது.

இதில் ஊழல் புகார் எழுந்தது. இதையடுத்து அந்த புதிய மதுபான கொள்கை கைவிடப்பட்டது. இருப்பினும் ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வரும், டெல்லி கலால் துறை அமைச்சராக இருந்தவருமான மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து சிபிஐயுடன் சேர்ந்து அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டது. அதன்பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிபிஐ விசாரணைக்கு சென்றபோது மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அமலாக்கத்துறையும் அவரை கைது செய்தது.. ஒன்றரை ஆண்டு சிறை வாசத்துக்கு பிறகு மணீஷ் சிசோடிா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
ஆனால் அதற்கு முன்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார். டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 23ல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது வரை அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அதன்பிறகு லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக உச்சநீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்த ஜாமீன் காலம் முடிவடைந்த நிலையில் ஜுன் 2ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் சிறையில் சரணடைந்தார். இதையடுத்து அமலாக்கத்துறை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய நிலையில் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் அதற்குள் ஜூன் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது. இந்த கைது நடவடிக்கையும் டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தான் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைக்கும் சிபிஐயால் கைது செய்யப்பட்டதால் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து சிறையிலேயே உள்ளார். இந்நிலையில் தான் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி காட்சி மூலம் ஆஜர்ப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, அவரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 3-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து செப்டம்பர் 3ம் தேதி வரை திகார் சிறையிலயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications