தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் இரட்டிப்பான லாக்அப் மரணங்கள்.. உத்தரப் பிரதேசத்தில் நிலைமை ரொம்பவே மோசம்!
டெல்லி: நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பதிவான லாக்அப் மரணங்கள் மற்றும் என்கவுன்டர் குறித்த தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 18ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இன்று நாடாளுமன்றத்தில் இந்தியாவில் கடந்த இரு ஆண்டுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ள லாக்அப் மரணங்கள் குறித்த தரவுகளை மத்திய அரசு பகிர்ந்து உள்ளது.

லாக்அப் மரணங்கள்
இன்று மக்களவையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்பி அப்துஸ்ஸமத் சமதானி நாட்டில் ஏற்படும் லாக்அப் மரணங்கள் தொடர்பாகக் கேள்வி எழுப்பினார். அதற்குக் கடந்த 2020 ஏப்ரல் 1 முதல் ஏற்பட்ட லாக்அப் மற்றும் என்கவுன்டர் மரணங்கள் தொடர்பான ஆண்டுவாரியான மற்றும் மாநில வாரியான தரவுகளை உள் துறை அமைச்சகம் பதிலாகக் கொடுத்து உள்ளது. கடந்த 2020-21இல் 1,940ஆக இருந்த லாக்அப் மரணங்கள், இது 2021-22இல் 2,544ஆக அதிகரித்து உள்ளது

உத்தரப் பிரதேசம் மோசம்
2020-21இல் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 451 பேர் போலீஸ் காவலில் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மேற்கு வங்கத்தில் 185 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 163 பேரும் உயிரிழந்துள்ளனர். 2021-22ஆம் ஆண்டிலும் மத்திய உத்தரப் பிரதேசம் தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு 501 லாக்அப் மரணங்கள் இந்தாண்டு பதிவாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் 257 பேரும் மத்தியப் பிரதேசத்தில் 201 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இரட்டிப்பு
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு உடன் ஒப்பிடுகையில் லாக்அப் மரணங்கள் கிட்டதட்ட இரட்டிப்பாகி உள்ளது. 2020-21ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 63 லாக்அப் மரணங்கள் உறுதியாகி இருந்தன. அதேநேரம் 2021-22ஆம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 109 லாக்அப் மரணங்கள் பதிவாகி உள்ளன. இது மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு இதில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

போலீஸ் என்கவுன்டர்கள்
அதேபோல நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த போலீஸ் என்கவுன்டர்களில் மரணங்கள் தொடர்பாகவும் தனியாகத் தரவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. 2020-21ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 82 போலீஸ் என்கவுன்டர்கள் நடந்துள்ளன. மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ள சத்தீஸ்கரில் அதிகபட்சமாக 24 என்கவுன்டர்கள் நடந்துள்ளன. 2021-22ஆம் ஆண்டில் 151ஆக அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாகக் காஷ்மீரில் 45 என்கவுன்டர்கள் நடந்துள்ளன.

மத்திய அரசு விளக்கம்
போலீசாரின் நடவடிக்கை குறித்த கேள்விக்குப் பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி போலீஸ் மற்றும் சட்ட ஒழுங்கு ஆகியவை மாநிலப் பட்டியலில் வருகிறது. எனவே, நாட்டில் இருக்கும் குடிமக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பை உறுதி செய்வது சம்பந்தப்பட்ட மாநில அரசின் முதன்மை பொறுப்பாகும் என அதில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications