லோக்சபா தேர்தல் 2024: தொகுதி பங்கீடு சுமூகமாகுமா? நாளை "இந்தியா கூட்டணி" தலைவர்கள் ஆலோசனை!
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்டவை தொடர்பாக "இந்தியா" கூட்டணியின் தலைவர்கள் நாளை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்த உள்ளனர்.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த 28 எதிர்க் கட்சிகள் இணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியில் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. மாநிலங்களில் செல்வாக்குமிக்க கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளன.

"இந்தியா" கூட்டணி கட்சிகளிடையே தொகுதி உடன்பாட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் தொகுதி உடன்பாட்டில் காங்கிரஸை ரொம்பவே கூட்டணி கட்சிகள் சீண்டிவிட்டன. காங்கிரஸ் கட்சிக்கு மிக மிக சொற்பமான இடங்களைத்தான் தர முடியும் என்ற கறார் நிலையை "இந்தியா" கூட்டணி கட்சிகள் கையில் எடுத்தன. தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் ஓரளவு கவுரவமான இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க 'இந்தியா' கூட்டணி கட்சிகள் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸை காயப்படுத்திய திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் கூட சுமூகமாக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தொகுதி பங்கீடு, தொகுதிகளை அடையாளம் காணுதல், பொது வேட்பாளர்களை நிறுத்துதல், தேர்தல் பிரசாரங்களை ஒருங்கிணைந்து மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு என்பது திமுகவின் கைகளில் உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 8 முதல் 10 இடங்கள் ஒதுக்க வாய்ப்பிருப்பது தற்போதைய நிலையி. அதே நேரத்தில் கூட்டணியில் பாமக இடம் பெற்றால் காங்கிரஸுக்கான இடங்கள் 4 முதல் 5 ஆக குறையக் கூடும். இது தொடர்பாக திமுக- காங்கிரஸ் தலைவர்கள் இடையே ஏற்கனவே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications