வடக்கே விரட்டும் பாஜக பேரலை! மகனை தொடர்ந்து தெற்கு நோக்கி ஓடி வரும் சோனியா-தெலுங்கானாவில் தஞ்சம்?
டெல்லி: லோக்சபா தேர்தலில் தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் படுதீவிரமாக களமிறங்கி உள்ளது. ஒரு பக்கம், பரணில் கிடந்த "இந்தியா" கூட்டணியை தூசு தட்டி இருக்கிறது. அந்த ஜரூருடன் ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கும் காங்கிரஸ் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்காக 5 பேர் கொண்ட குழுவை இப்போதே அமைத்துவிட்டது காங்கிரஸ்.

மேடக் எம்பியாக மரணித்த இந்திரா: பொதுவாக நேரு குடும்பத்தினர் உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடுவது வழக்கம். 1980 லோக்சபா தேர்தலில் ஒருங்கிணைந்த ஆந்திராவின் மேடக் தொகுதியில் இந்திரா காந்தி அம்மையார் போட்டியிட்டு 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை அறுவடை செய்தார். உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியும் இந்திரா அம்மையார் போட்டியிட்டு வென்றார். ஆனால் ரேபரேலி எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு மேடக் எம்பியாகவே நீடித்தார். இந்திரா காந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்ட போது இன்றைய தெலுங்கானாவின் மேடக் தொகுதி எம்பியாகவே மரணித்தார். இதனை அண்மைய தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் பிரசாரத்துக்கு பயன்படுத்தியது.
ரேபரேலி சோனியா: 1999-ம் ஆண்டு இந்திராவின் மருமகள் சோனியா காந்தி, உத்தரப்பிரதேசத்தின் அமேதி மற்றும் கர்நாடகாவின் பெல்லாரி லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றார். பெல்லாரியில் பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜை வீழ்த்தினார் சோனியா. ஆனாலும் அமேதி தொகுதி எம்பி பதவியை தக்க வைத்துக் கொண்டார் சோனியா. 2004-ம் ஆண்டு முதல் ரேபரேலி தொகுதியில் சோனியா போட்டியிட்டு வென்று வருகிறார்.
தெற்கே வந்த ராகுல்: உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியும் நேரு குடும்பத்தின் தொகுதிதான். சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி வென்ற தொகுதி இது. 2004, 2009, 2014-ல் இந்திரா அம்மையாரின் பேரன் ராகுல் காந்தி வென்ற தொகுதி. ஆனால் 2019-ம் ஆண்டு ராகுல் காந்தியை ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். அப்போது கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிட்டு வென்றார். இதனால் இப்போது வயநாடு தொகுதி எம்பிதான் ராகுல் காந்தி.
வடக்கே சோனியா வெல்வாரா?: அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலிலும் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில்தான் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் சோனியா காந்தி மீண்டும் ரேபரேலியில் போட்டியிட்டால் வெல்வாரா? என்கிற சந்தேகங்களை தேர்தல் கருத்து கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன. காரணம் இந்தி பெல்ட் எனப்படும் வட இந்திய மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் ஆதரவு அலை வீசுகிறது. உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அத்தனை தொகுதிகளையும் பாஜகதான் அள்ளும் என்கின்றன இந்த கருத்து கணிப்புகள். பாஜகவின் இந்த சுனாமி அலையில் சோனியா தோல்வியைத் தழுவினாலும் ஆச்சரியமில்லை என்பது அரசியல் பார்வையாளர்கள்.
தெலுங்கானா மகபூப் நகர்: இதனால்தான் இப்போதே பாதுகாப்பான ஒரு தொகுதியை காங்கிரஸ் சீனியர்கள் சோனியாவுக்காக தேடுகிறார்களாம். அப்படியான தொகுதிகளில் ஒன்றுதான் தெலுங்கானாவின் மகபூப் நகர் தொகுதி எனப்படுகிறது. தெலுங்கானாவின் தற்போதைய முதல்வர் ரேவந்த் ரெட்டி வென்ற கோடங்கல் சட்டசபை தொகுதியை உள்ளடக்கியது மகபூப் நகர் தொகுதி. 2009, 2014 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களில் பிஆர்எஸ் கட்சிதான் இங்கு வாகை சூடியது. இருப்பினும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தற்போது சோனியா காந்திக்காக களப் பணிகளை முழுவீச்சில் முடுக்கிவிட்டிருக்கிறார் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள். சோனியா காந்தியை போட்டியிட வைத்து வெற்றி பெற வைப்பதன் மூலம் காங்கிரஸில் தமது செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்பதுதான் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் வியூகமாம்.












Click it and Unblock the Notifications