மே 23ம் தேதி இல்லை.. ஒருநாள் கழித்துதான் லோக்சபா தேர்தல் முடிவு வெளியாகுமாம்.. காரணம் இதுதான்!
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் வழக்கத்தைவிட நான்கு மணி நேரம் அல்லது ஒருநாள் கூட தாமதமாக வெளியாக வாய்ப்பு உள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக லோக்சபா தேர்தலின் போது, வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததும், காலை 11 மணியளவில் தேர்தல் முடிவுகள் எந்த திசையில் செல்கின்றன என்ற டிரென்ட் கிடைத்துவிடும்.
மாலை 4 மணி அல்லது 5 மணிக்குள்ளாக ஏறத்தாழ பெரும்பான்மையான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகி, யார் ஆட்சியை அமைக்கப் போகிறார்கள் என்ற விவரம் தெரிந்துவிடும்.

காலதாமதம்
ஆனால், வரும் 23ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்தன்று, முழு விவரமும் தெரியவர, வழக்கத்தைவிட, கூடுதலாக சுமார் 4 முதல் 5 மணி நேரம் தேவைப்படும் என்று, துணை தேர்தல் ஆணையர் சுதீப் ஜெயின், 'இந்தியா டுடே' டிவி சேனலிடம் தெரிவித்தார். இவ்வாறு தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு, காலதாமதம் ஏற்படுவதற்கு காரணம், VVPAT எனப்படும் வாக்குச்சீட்டு, சரிபார்ப்பு முறையாகும்.

முழு ரிசல்ட்
ஒரு சட்டசபை தொகுதியில் குறைந்தது, ஐந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலாவது விவிபேட் சோதனைக்கு உள்ளாக்கப்படும் என்ற நெறிமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளதால், தேர்தல் முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தேர்தல் முடிவுகள் மே 23ம் தேதியன்றே, வெளிவரும் என்று கூறிவிட முடியாது. விவிபேட் பரிசோதிப்பு, பணிகளின் காரணமாக, தேர்தல் முடிவுகள் ஒருநாள் தாமதமாக, அதாவது மே 24ம் தேதி தான் முழுமையாக வெளிவரும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

சரியான தேர்தல் முடிவுகள்
விவிபேட் தொடர்பான வழக்கில், ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குச்சீட்டு பார்க்கப்படும் என்ற விதிமுறைக்கு மாறாக 5 வாக்குப்பதிவு இயந்திரங்களில் சோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதன் மூலம் தேர்தலில் வெளிப்படைத்தன்மை நிலைநாட்டப்படும் என்றாலும், தேர்தல் முடிவுகள் வெளியாகுவதில், அதிகபட்சமாக, ஒரு நாள் வரை காலதாமதம் ஆகப்போகிறது உறுதியாகிவிட்டது.

5 மெஷின்கள்
21 எதிர்க்கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் விவிபேட், தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 50 சதவீத வாக்குப்பதிவு எந்திரங்களில் விவிபேட் வாக்குச்சீட்டு பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை. ஆனால் உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், அதிகபட்சம் 5 வாக்குப்பதிவு எந்திரங்களில் சோதனை நடத்தினால் போதுமானது என்று தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications