போச்சா? காங்கிரஸ், ஆம்ஆத்மி சேர்ந்தாலும் பாஜக தான் ‛மாஸ்’.. டெல்லி லோக்சபா தேர்தல் கருத்து கணிப்பு
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் டெல்லியில் காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் இணைந்து செயல்பட்டாலும் கூட பாஜக தான் அதிக இடங்களில் வெற்றி பெறும் என பரபரப்பான கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இதனால் காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சியின் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். டெல்லியை பொறுத்தமட்டில் ஆம்ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. டெல்லி யூனியன் பிரதேசமாக இருப்பதால் அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசை விட மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரம் உள்ளது.

இத்தகைய சூழலில் தான் சமீபத்தில் குடிமைப்பணி அதிகாரிகள் நியமனம் தொடர்பாக டெல்லி அரசுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் மத்திய அரசு சட்ட திருத்தம் மூலம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்து போக செய்துள்ளது. இதுதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆம்ஆத்மி, பாஜக இடையே மோதல் இன்னும் வலுத்துள்ளது.
அதேபோல் தான் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. இத்தகைய சூழலில் தான் காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்பட 26 கட்சிகள் இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் ‛இந்தியா' என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளனர். இந்த கூட்டணி மூலம் டெல்லி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-ஆம்ஆத்மி கட்சிகள் இணைந்து பாஜகவை வீழ்த்தும் என அனைவராலும் நம்பப்பட்டது. இத்தகைய சூழலில் தான் ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா' சார்பில் டெல்லி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன.
இந்த கருத்து கணிப்பு என்பது டெல்லியில் ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற கூட்டணியில் செயல்பட்டாலும் கூட பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி தான் மாஸாக அதிக இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டெல்லியில் மொத்தம் 7 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 5 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் இணைந்த ‛‛இந்தியா'' கூட்டணி வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஆம்ஆத்மி, பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியே டெல்லியில் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பாஜக 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மாறாக காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இத்தகைய சூழலில் இந்த தேர்தலில் பாஜக 2 இடங்களை பறிகொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடந்த முறை ஒரு இடம் கூட கிடைக்காத நிலையில் இந்த முறை ஆம்ஆத்மியும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து 2 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறியிருப்பது ‛இந்தியா' கூட்டணிக்கு பாசிட்டிவ்வாக பார்க்கப்படுகிறது. ஆனால் டெல்லியில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 5 இடங்கள் வரை வெற்றி பெறலாம் என காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சி நினைக்கும் நிலையில் தற்போதைய கருத்து கணிப்பு என்பது இரு கட்சிகளுக்கும் கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications