மத்திய அரசு ரூ1,000 கோடியில் களமிறக்கும் புதிய ஒட்டு கேட்பு மென்பொருள்- எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு!
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளை உன்னிப்பாக கண்காணிக்க ரூ1,000 கோடியில் புதிய மென்பொருள் ஒன்றை களமிறக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளது.
இஸ்ரேல் தயாரித்த பெகாசஸ் ஒட்டு கேட்பு மென்பொருள், பயங்கரவாத சதித் திட்டங்களை கண்டறிவதற்கானது. ஆனால் உலக நாடுகளோ இந்த ஒட்டு கேட்பு மென்பொருளை அரசியலுக்காக பயன்படுத்தின. இதனால் பல நாடுகளில் பெரும் பிரளயம் வெடித்தது.
பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒருவரது செல்போனை எளிதாக ஹேக் செய்ய முடியும். அப்படி ஹேக் செய்து, செல்போனில் இருக்கும் அனைத்து தகவல்களையும் எளிதாக களவாடவும் முடியும்; ஹேக் செய்ய்யபப்ட்ட செல்போனை பயன்படுத்துகிற நபரின் நடமாட்டத்தையும் கண்காணிக்க முடியும். இதுதான் பெகாசஸின் பின்னணி.
இந்தியாவில் மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் என அனைத்து துறையினரது செல்போன்களையும் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டு கேட்டதும் அம்பலமானது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாட்டின் நாடாளுமன்றத்தையும் எதிர்கக்ட்சிகள் இந்த விவகாரத்தில் முடக்கின. ஆனால் நீதிமன்றங்களில் இந்த விவகாரம் மத்திய அரசுக்கு சாதகமாகிப் போனது.

தற்போது மீண்டும் ஒட்டு கேட்பு மென்பொருள் விவகாரம் தலையெடுத்துள்ளது. மத்திய பாஜக அரசானது ரூ1,000 கோடியில் புதிய ஒட்டு கேட்பு மென்பொருளை களமிறக்க உள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் எதிர்க்கட்சிகளை கண்காணிக்கவும் மடக்கவும் முடக்கவும் இந்த மென்பொருளை மத்திய பாஜக அரசு பயன்படுத்தப் போவதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த மென்பொருள் தொடர்பாக கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் மத்திய பாஜக அரசும் மத்திய அமைச்சர்களும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருக்கின்றனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளது. இனிவரும் நாட்களில் புதிய ஒட்டு கேட்பு மென்பொருள் மீண்டும் புதிய பிரளயத்தை உருவாக்கும் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications