வரலாற்றில் முதல் முறை.. சபாநாயகர் பதவிக்கு தேர்தல்.. கட்சி எம்பிக்களுக்கு காங்கிரஸ் போட்ட உத்தரவு
டெல்லி: லோக்சபா சபாநாயகர் பதவிக்கு முதல் முறையாக தேர்தல் நடைபெற உள்ளது. நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது எம்.பிக்கள் அனைவருக்கும் கொறடா உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அதேபோல பாஜகவும் தனது எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளது.
18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுவாக லோக்சபா சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படுவதில்லை. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருங்கிணைந்து ஒருமனதாக போட்டியின்றி ஒருவரைத் தேர்ந்தெடுப்பது மரபாகும்.

இந்த நிலையில் நேற்று வரை லோக்சபா சபாநாயகர் பதவி தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. லோக்சபா சபாநாயகர் பதவிக்கான வேட்பு மனுத் தாக்கல் முடிவடையும் நிலையில் எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் திமுகவின் டிஆர் பாலு, காங்கிரஸின் கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனான பேச்சுவார்த்தையில் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தர வலியுறுத்தப்பட்டது. இதனை மத்திய அரசு தரப்பு ஏற்க மறுத்தது. இதனால் இந்தியா கூட்டணி தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் லோக்சபா சபாநாயகர் வேட்பாளராக ஓம் பிர்லா நிறுத்தப்படுகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவைச் சேர்ந்த கொடிக்குன்னில் சுரேசை (காங்கிரஸ்), லோக்சபா சபாநாயகர் தேர்தலில் களமிறக்கி இருக்கிறது. லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் கொடிக்குன்னில் சுரேஷ் தற்போது வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
லோக்சபா சபாநாயகர் பதவிக்கு முதல் முறையாக தேர்தல் நடைபெற உள்ளது. நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது எம்.பிக்கள் அனைவருக்கும் கொறடா உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அதேபோல பாஜகவும் தனது எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதில் நாளை அனைத்து எம்பிக்களும் அவைக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் கொறடா கொடிக்குன்னில் சுரேஷ், கட்சி எம்பிக்களுக்கு பிறப்பித்த்த உத்தரவில் நாளை மிக முக்கியமான விவகாரம் அவையில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. எனவே காலை 11 மணியில் இருந்து அவை ஒத்தி வைக்கப்படும் வரை அனைத்து எம்.பிக்களும் அவையில் தவறாமல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications