“வாழ்க தமிழ்!” தமிழில் பொங்கல் வாழ்த்துகளை சொன்ன மோடி! எல்.முருகன் இல்லத்தில் களைகட்டிய விழா
டெல்லி: டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, வாழ்க தமிழ், வளர்க பாரதம் என தமிழில் பொங்கல் வாழ்த்துகளை கூறியுள்ளார்.
சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என மோடி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழரின் பெருமையை விளக்குவதே பொங்கல் பண்டிகை என்றும் கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்கிற கருப்பொருளில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
பொங்கல் விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜி.வி.பிரகாஷின் இசை நிகழ்ச்சியை தொடர்ந்து, பொங்கல் விழா நடைபெற்றது. பிரதமர் மோடி, கன்றுகளுக்கு உணவு கொடுத்து பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.
விழாவில் பிரதமர் மோடி, இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என தமிழில் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படும் திருவிழா. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், வெவ்வேறு பெயர்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விழாதான் இந்த பொங்கல் பண்டிகை. இதையொட்டி அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தின் கங்கை கொண்ட சோழபுரத்தில் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதார பண்டிகை இது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications