பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்பு.. இனி கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யப் போவது இயந்திரங்கள்தான்.. செம
டெல்லி: இந்தியா முழுவதும் கழிவுநீர் தொட்டிகள், சாக்கடைகள் ஆகியவற்றை சுத்தம் செய்ய இனி கட்டாயம் இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கழிவுநீர் தொட்டிகள், பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது ஏராளமாள தொழிலாளர்கள் உயிரிழப்பது அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிவிப்புக்கு அனைத்து தரப்பு மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்த நடைமுறையில் எந்த சமரசமும் கிடையாது என்றும், மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
பட்ஜெட் இருக்கட்டும்.. நிதியமைச்சர் “ஹல்வா” கொடுப்பது ஏன் தெரியுமா? வியப்படைய வைக்கும் பாரம்பரியம்
தொடரும் அவலம்
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும், மனிதக் கழிவை மனிதர்களே சுத்தம் செய்யும் அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர் கதையாகவே உள்ளது. இந்தக் கொடுமையை ஒழிக்க உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பல முறை உத்தரவிட்டும், மத்திய - மாநில அரசுகள் சட்டம் இயற்றியும் கூட இந்த மோசமான நடைமுறையை முழுவதுமாக ஒழிக்க முடியவில்லை.
மாஸ் அறிவிப்பு
இந்நிலையில், இந்த பிரச்சினையின் தீவிரத்தை கருத்தில்கொண்டு பட்ஜெட் உரையில் சில அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது உரையில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நாட்டில் உள்ள அனைத்து நகரங்களிலும், சிறு நகரங்களிலும் (டவுன்) கழிவுநீர் தொட்டி, பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்தப் பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்தக் கூடாது.
கடும் நடவடிக்கை
பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை தூய்மை செய்வதற்கான இயந்திரங்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் கொள்முதல் செய்யும் நடவடிக்கையை தொடங்க வேண்டும். இனி மேற்கூறிய பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெரும்பாலான மனிதர்களின் நலனுக்காக ஒருதரப்பு மக்கள் கஷ்டப்படுவதை அனுமதிக்க முடியாது" என நிர்மலா சீதாராமன் கூறினார்.
தொடரும் மரணங்கள்
கழிவுநீர் தொட்டி, பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் போது கடந்த ஆண்டு மட்டும் 400 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட 20 மாநிலங்களில் மட்டும் கடந்த ஆண்டு மேற்குறிப்பிட்ட பணிகளில் ஈடுபடும் போது 48 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக ஹரியானாவில் 13 பேரும், மகாராஷ்டிராவில் 12 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள்,. இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.