ம.பி தேர்தல்: ராகுல் எடுத்த சர்வே முடிவுகள்! காங்கிரஸுக்கு மணி மகுடம் உறுதி! மண்ணை கவ்வுமாம் பாஜக!
டெல்லி: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் கள நிலவரம் தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திய கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 135 இடங்கள் 'உறுதியாக' கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இருப்பினும் 150 தொகுதிகளைக் கைப்பற்றுவதே இலக்காக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளாராம் ராகுல்.
ம.பி.யில் 230 தொகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பான்மைக்கு தேவை 116 இடங்கள். 2018 சட்டசபை தேர்தலில் பாஜக 109; காங்கிரஸ் 114 இடங்களில் வென்றது. ஆனால் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்யா சிந்தியா எனும் விக்கெட்டை வீழ்த்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்து கமல்நாத் அரசை காலி செய்தது பாஜக. அத்துடன் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தது.

பாஜக சிவராஜ் சிங் சவுகான்: பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் சிவராஜ்சிங் சவுகான். இன்றைய பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்த சமகாலத்தில் ம.பி. முதல்வராக இருந்தவர் சிவராஜ் சிங் சவுகான். தற்போது மோடி பிரதமராகிவிட்டார். ஆனாலும் ம.பி. தேர்தலிலேயே சிவராஜ் சின்கா, சீட்டு கிடைக்குமா என அல்லாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். பாஜக மேலிடத்தைப் பொறுத்தவரை சிவராஜ் சிங் சவுகானை, அத்வானி பாணி ஓரம் கட்டுவதில் உறுதியாக உள்ளது. இதனால் கடைசி நிமிடத்தில் தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்துள்ளது. அதேநேரத்தில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர்களாக 'பலரது' பெயரும் உச்சரிக்கப்படுகிறது. பாஜகவின் 20 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விட பிரதமர் மோடியின் சாதனைகளை ம.பி தேர்தல் களத்தில் முன்னிறுத்தி வருகிறது. இது பாஜகவை உள்ளூர் மக்களிடம் இருந்து அன்னியப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

ராகுல் எடுத்த சர்வே: பாஜகவின் இந்த களேபர சூழ்நிலையில்தான் காங்கிரஸ் கட்சி, கமுக்கமாகவும் கச்சிதமாகவும் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்ய காத்திருக்கிறது. ம.பி கட்சி நிர்வாகிகள் கொடுத்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் தமது டீமிடம் சர்வே நடத்த சொன்னாராம் ராகுல் காந்தி. இந்த சர்வேயில்தான் ம.பி.யில் 135 இடங்களில் காங்கிரஸ் வெல்வது உறுதி என தெரிவிக்கப்பட்டதாம். இந்த உற்சாகத்தில்தான் 150 தொகுதிகளைக் கைப்பற்றுவதை இலக்காக வைத்துக் கொள்ளுங்கள் என அறிவுரை கொடுத்திருக்கிறாராம் ராகுல் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
காங்கிரஸ் நம்பிக்கை: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளும் காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும் என்பதை திட்டவட்டமாகவே கூறி வருகின்றன. என்னதான் "இந்தியா" கூட்டணியில் இடம்பெற்ற நிலையிலும் ம.பி.யில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட்டாலும் 'காங்கிரஸ்' அறுவடை செய்யத்தான் போகிறது என்பதுதான் ராகுல் உள்ளிட்ட அக்கட்சித் தலைவர்களின் ஆகப் பெரும் நம்பிக்கை என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications